சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பது ஏன்? சுக பிரசவம் ஏற்பட வழிமுறைகள் என்ன?
சென்னை: சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு குறித்து அதை தவிர்க்கும் வழிகள் குறித்தும் அறியலாம்.
பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் என்பார்கள். பிரசவ வலி என்பது தாங்க முடியாத வலியாகும். நண்பர்களோ உறவினர்களோ அவர்களின் அன்பானவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்றால் உடனே நாம் கேட்கும் கேள்வி நார்மலா, சிசேரியனா என்பதுதான்.
நார்மல் என்றால் என்ன, சிசேரியன் என்றால் என்ன? என்பதை முதலில்
பார்க்கலாம். நார்மல் டெலிவரி என்பது சுக பிரசவம் ஆகும். இந்த டெலிவரியில்
தாங்க முடியாத வலி இருக்கும். இதுகுறித்து தனியார் தொலைகாட்சிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியர் அர்ச்சனா கந்தசாமி கூறுகையில், கருப்பையில் இருக்கும் குழந்தை பேறு
காலத்தின் போது தாயின் இடுப்பு எலும்புகளை தாண்டி கர்ப்பப்பை கடந்து வரும்.

கர்ப்பப்பை
பிறகு கர்ப்பப்பை வாயை கடந்த பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதுவே சுகப்பிரசவம் என்பார்கள். இந்த பிரசவத்தில் வலி அதிகமாக இருக்கும். இதற்காக தற்போது தண்ணீரில் பிரசவம் பார்ப்பது என்ற முறையெல்லாம் வந்துவிட்டது. இதில் வலி சற்று குறைவுதான் என்கிறார்கள். இந்த இடுப்பு எலும்பு விரிவதற்காக சில யோகாக்களையும் உடற்பயிற்சிகளையும் கர்ப்பிணிகள் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிசேரியன்
சிசேரியன் அறுவை சிகிச்சை என்பது குழந்தை வெளியேறும் இந்தப் பாதையில் தடை ஏற்படுதல், பிரசவத்தின் போது உடல்நலம் காரணமாக தாய் அல்லது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகுதல், உரிய காலத்தில் பிரசவ வலி ஏற்படாமல் இருத்தல், குழந்தையின் கழுத்தில் நஞ்சு கொடி சுற்றிக் கொள்ளுதல், குழந்தை அதனுடைய கழிவுகளை குடித்துவிடுதல், பைப்ராய்டு போன்ற சதை இருந்து அது குழந்தை கர்ப்பப்பை வாயை மறைத்துக் கொள்ளுதல், செயற்கை முறையில் கருத்தரித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக சிசேரியன் நடக்கலாம்.

சிசேரியன் பிரசவங்கள்
இந்த சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திருமணம் தாமதமாவது, குழந்தை பிறப்பை தள்ளி போடுவது. 35 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், உள்ளிட்ட பிரச்சினைகளால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

பிரச்சினை
இதனால் பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சினையே சிசேரியன்கள் அதிகரிக்க காரணமாகின்றன. கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதை பொருத்தே சிசேரியன் செய்வது திட்டமிடப்படுகிறது. இது போல் சிகிச்சைக்கு செல்லும் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவர்கள் கூறிவிடுவார்கள்.

கடைசி நேரத்தில் சிசேரியன்
ஆனால் சில நேரங்களில் கடைசி நேரத்திலும் சுகபிரசவம் என்பது சிசேரியன் அறுவை சிகிச்சையாக மாற வாய்ப்புள்ளது. இரட்டை குழந்தை உள்ளிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்யப்படும். கர்ப்பிணிகள் சத்தான உணவை உட்கொண்டு உடலை ஆரோக்கியமாகவும் தங்கள் உடலில் சர்க்கரை, ரத்த அழுத்தம், உள்ளிட்ட நோய்கள் வராமலும் , அப்படியே அந்த நோய்கள் இருந்தாலும் கட்டுக்குள் வைத்திருந்தும் சுக பிரசவம் அடையலாம். இவற்றுடன் யோகா, மைல்டான உடற்பயிற்சி, நடைபயிற்சி உள்ளிட்டவை அவசிமானதாகும். அதுபோல் உணவு முறையில் நல்லதொரு மாற்றத்தையும் கொண்டு வர வேண்டும்.












Click it and Unblock the Notifications