நாளை பாமக பொதுக்குழு..! பாமக தலைவர் ‘மாற்றம்’.. தலைவராக ’முன்னேற்றம்’..! சாதிப்பாரா ‘அன்புமணி’.!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் ஜி.கே.மணி 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெற இருக்கும் கட்சியின் பொதுக்குழுவில் கட்சியின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பதவி ஏற்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி அதாவது சனிக்கிழமையான நாளை காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார்.

அன்புமணி ராமதாஸ்
கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமக மாநில, மாவட்ட மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் கட்சியின் தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். கட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்தே கால்நூற்றாண்டுகளாக கட்சித் தலைவராக இருந்த ஜிகே மணிக்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.

பாமக தலைவர்
கடந்த சில நாட்களாகவே அன்புமணி ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார் என யூகங்கள் வெளியான வண்ணம் இருந்தன. அதற்கேற்றார் போல் கட்சி சார்பில் பல கூட்டங்களில் பங்கேற்று பேசிய அன்புமணி ராமதாஸ் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என வலியுறுத்தி பேசி வந்தார். மேலும் தமிழகத்திலேயே அதிக இளைஞர்களை கொண்ட கட்சி பாமக தான் எனவும் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் எனக் கூறியதை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சற்றே மன வருத்தத்தில் இருந்தாலும் கட்சியின் எதிர்கால நலன் கருதி அதனை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

தீவிர ஆலோசனை
கட்சியின் தலைவர் என்ற முறையில் அறிக்கை வெளியிடுவது, கட்சி குறித்த செய்திகளை வெளியிடுவது என்று இருந்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் தான் கட்சியின் முழு அதிகாரத்தையும் கையில் வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் அன்புமணி ராமதாஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் என்ற முறையில் மாவட்டம் தோறும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வர உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து கட்சியினரை நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

கட்சியினர் வரவேற்பு
ஆனால் அன்புமணி ராமதாஸுக்குப் பின் அரசியலுக்கு வந்த துரை வைகோ, பிரேமலதா விஜயகாந்த், உள்ளிட்டோர் பொருளாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை அவர்களது கட்சியில் வகித்து வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் முகமாக அன்புமணி ராமதாஸ் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே அவர் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளார். இதற்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் வரவேற்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜிகே மணி முன்மொழிகிறார்
இதையடுத்து நாளை நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாசை நியமிக்கும் தீர்மானத்தை ஜிகே மணியே முன்மொழிவு எனவும் பின்னர் அது நிறைவேற்றப்பட்டு கட்சியில் இரண்டாவது தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. 1997ஆம் ஆண்டில் பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் தொடங்கிய அவருடைய அரசியல் பயணம், கட்சியில் அடிப்படை உறுப்பினர், இளைஞரணித்தலைவர் எனத் தொடர்ந்து தற்போது கட்சியின் தலைவராக உயந்திருக்கிறார்.

அன்புமணி முன் உள்ள சவால்கள்
மேலும் மருத்துவர், சுகாதாரதுறை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என சுமார் 25 வருடங்களாக, அரசியல் வாழ்வில் பல நிலைகளைக் கடந்து, பல்வேறு போராட்டங்களையும், சவால்களையும் சந்தித்து பாமகவின் தலைமையாக உருவெடுத்திருக்கிறார் அன்புமணி. அதே நேரத்தில் அவருக்கு இனிமேலும் சவால்கள் அதிகம் உள்ளது, கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டியது, பாமக மீது உள்ள விமர்சனங்கள், கூட்டணி குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக 50 ஆண்டுகளாக தேர்தலில் மாறி மாறி வெற்றியை பெற்று வரும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை எப்படி சமாளிப்பது ஆகியவற்றை எப்படி சமாளிப்பார் என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications