குழந்தை பிறப்புக்கும் பாவ புண்ணியத்துக்கும் சம்பந்தமில்லை! கருவுறாமைக்கு காரணம் கூறும் டாக்டர் பரூக்
சென்னை: குழந்தை பிறப்புக்கும் பாவ புண்ணியங்களுக்கும் சம்பந்தமில்லை. நல்லவருக்கு குழந்தை பிறக்கும் . தீயவருக்கெல்லாம் குழந்தை பிறக்காது என்று நம்புவது தவறு என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறுகையில், குழந்தை பிறப்பு என்பதற்கு சிலர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சிலருக்கு சீக்கிரம் குழந்தை உண்டாகி விடுகிறது. அவ்வளவு தான்.
மகப்பேறின்மைக்கு பல அறிவியல் காரணங்கள் உண்டு
- இணையர்கள் முறையாக இணை சேராமல் பல காலம் பிரிந்தே இருப்பது ( இது தற்காலத்தில் அதிகம் )
- பிசிஓடி / உடல் பருமன் / கர்ப்ப பை குழாய் அடைப்பு / கர்ப்ப பை வாய் தொற்று / உடலுறவில் நாட்டமின்மை / உடலுறவின் போது அதீத வலி / கருமுட்டைகள் எண்ணிக்கையில் குறைவாகவும் தரத்தில் குறைவாகவும் இருப்பது போன்ற பல பெண்பால் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.
- ஆண்குறி விரைப்புத்தன்மை குறைபாடு/ விந்து எண்ணிக்கை / தரம் சார்ந்த குறைபாடு / உடலுறவில் நாட்டமின்மை போன்ற ஆண் பால் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.
பேரீச்சம் பழமும் அத்திப்பழமும் பெண்களுக்கு ஹீமோகுளோபினை அதிகரிக்குமா? டாக்டர் பரூக் விளக்கம்
மனமொப்பி
அல்லது இணையர் இருவரும் மனமொப்பி மகப்பேறை சற்று தள்ளிப்போடலாம் என்றும் முடிவு செய்திருக்கலாம். இதில் ஒருவர் நல்லவர் தீயவர் என்ற காரணங்கள் இல்லவே இல்லை. இவ்வுலகில் 100% நல்லவரும் யாருமிலர், 100% கெட்டவரும் யாருமிலர். ஒருவருக்கு நல்லவராக இருப்பவரே. இன்னொருவருக்கு கெட்டவராக இருக்கலாம். அதே நபருக்கு ஒரு காலத்தில் நல்லவராக இருந்தவர் இப்போது கெட்டவராக இருக்கலாம்.
மகப்பேறின்மை
இதையெல்லாம் மகப்பேறின்மைக்கு காரணங்களாக கூறுவது அபத்தம் ஆண் பெண் ஒன்றுகூடல் நிகழ்ந்தால் கரு தோன்றுவது இயற்கை. இந்த இயற்கை சிலருக்கு சில மாதங்களிலும் சிலருக்கு சில வருடங்களிலும் நடக்கலாம். எனினும் ஆண் பெண் இணையர் ஒன்றாக கூடி வாழ்ந்து அன்பு செய்து தொடர்ந்து ஒரு வருடம் இணை சேர்ந்தும் மகப்பேறு உண்டாகாவிடில்
அவர்கள் நாட வேண்டியது மகப்பேறு மருத்துவரை.
மகப்பேறு
மகப்பேறு தள்ளிப்போகும் இணையர் இது போன்ற நல்லவர் தீயவர் கருத்துகள் , பாவ புண்ணியக் கணக்குகள் போன்ற விசயங்களினால் எவ்வளவு மன உளைச்சலுக்கும் மன அமைதியின்மைக்கும் ஆளாவார்கள் என்பதை நாம் உணர வேண்டும். எக்காரணம் கொண்டும் மகப்பேறு தள்ளிச் செல்பவர்களை நம் சொல்லாலோ செயலாலோ காயப்படுத்தும் வேலையைச் செய்யக்கூடாது.
மகப்பேறு தள்ளிச் செல்பவர்கள்
மகப்பேறு தள்ளிச்செல்பவர்கள் தங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலைப்படுவதை விடவும் இந்த சமூகத்தின் ஏச்சு பேச்சுக்கும் கேலிக்கும் புறக்கணிப்புக்கும் தான் அஞ்சுகிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆதரவாகவே நாம் இருக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.