"3 ஆக பிரிங்க தமிழ்நாட்டை".. பாஜக குரலில் பேசுகிறாரா ராமதாஸ்.. தமிழர்களுக்கு நலன் பயக்க கூடியதா..?
ராமதாஸ் சொல்வதுபோல, தமிழகத்தை 3ஆக பிரிப்பது சாத்தியமாகுமா
சென்னை: தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு கோரிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் முன்வைத்துள்ளார்.. இது நமக்கு சாத்தியமா? நலன் பயக்கக்கூடியதா?
டாக்டர் ராமதாஸ் அறிக்கையின் சுருக்கம் இது: "புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது நல்லதா? என்றால் நிச்சயம் நல்லது தான். கடந்த 2000ஆவது ஆண்டில் பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பிரித்து ஜார்க்கண்ட், உத்தர்காண்ட், சத்தீஸ்கர் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக பிரிக்கப்பட்ட 3 மாநிலங்களும் அவற்றின் தாய் மாநிலங்களை விட அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.
2014ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் கூட போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆகவே மாநிலங்கள் பிரிக்கப்படுவது மிகவும் நல்லது. அது வளர்ச்சிக்கு நிச்சயமாக வழி வகுக்கும்.
கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போதுமானதல்ல- டாஸ்மாக் கடையை மூட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
மதுரை
மற்ற மாநிலங்கள் மட்டும் அல்ல.... தமிழ்நாட்டில் கூட சென்னை, கோவை ஆகியவற்றுக்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பதால் தென் மாவட்டங்களை தனியாக பிரிக்க வேண்டும் என்று அங்குள்ளவர்களும், கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். சிறியவையே அழகானவை...... Small is Beautiful!" என்று மிக நீண்ட ஒரு அறிக்கையை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
என்ன அவசரம்?
டாக்டர் ராமதாஸ் கோரிக்கை ஏற்புடையதா? தேர்தல் முடிந்து அனைவரும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் வேளையில், இப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைக்க என்ன அவசரம்? என்ன காரணம் என்று தெரியவில்லை.. அதேசமயம், இந்த கோரிக்கையை இதற்கு முன்பும் ராமதாஸ் முன்வைத்து வந்துள்ளார் என்பதையும் மறுப்பதற்கில்லை.
வன்னியர்கள்
நிர்வாக வசதிக்காக இப்படி மாநிலங்கள் பிரிக்கப்படும் என்பது மேலோட்டமான காரணமாக இருந்தாலும், வட தமிழகம் என்ற கருத்தையும் ராமதாஸ் வலியுறுத்தியபடியே வருகிறார்.. இதுகுறித்து ஒருசில அரசியல் நோக்கர்கள் சொல்லும்போது, வன்னியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்பதால்தான் ராமதாஸ் இவ்வாறு கேட்கிறார் என்றும், அப்போதுதான் அன்புமணியை எளிதாக முதல்வராக்ககூட முடியும் என்று கணக்கு போடுகிறார் என்றும் தங்கள் கருத்தை சொல்லி வருகிறார்கள்.
பிற சமுதாயத்தினர்
ஒருவேளை இந்த கூற்று உண்மை தான் என்றாலும், அவை ஏற்கத்தக்கவை அல்ல.. அதற்கு காரணம், கடந்த தேர்தல்களில் சொந்த தொகுதியிலேயே அன்புமணியால் வெல்ல முடியவில்லை.. அதுமட்டுமல்ல, வட மாவட்டங்களில் வன்னியர்கள் மட்டுமே இல்லை.. மற்ற சமூகங்கள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.. உடையார், முதலியார், வேளாளர், செட்டியார், யாதவர், தெலுங்கு பேசும் மக்கள், சிறுபான்மையினர் இப்படி பலரும் கலந்துள்ள நிலையில், இது சாத்தியமா? என்று தெரியவில்லை.
பாஜக
மற்றொன்று, இப்படி மாநிலங்களை பிரிப்பது என்பது ஆர்எஸ்எஸ்ஸின் இயல்பு.. இதைதான் பாஜக வடமாநிலங்களில் செய்து கொண்டிருக்கிறது.. "மாநிலம்" என்ற அந்தஸ்தை பாஜக எக்காலத்திலும் ஆதரிக்க முன்வருவதில்லை.. அதனால்தான் மாநிலங்களின் உரிமைகள் எளிதாக பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
யூனியன் பிரதேசம்
மாநிலங்களை கூறுபோட்டு பிரித்துவிடுவதால் என்னென்ன நடக்கும்? முதலாவதாக, ஒரு மாநிலத்தின் அந்தஸ்து அதாவது "தாயகம்" என்பது அடியோடு நொறுக்கப்பட்டு விடும்.. இரண்டாவதாக, மாநிலங்களை பிரிப்பதால், அவை நிச்சயம் யூனியன் பிரதேசமாகிவிடும்.. அப்படி யூனியன் பிரதேசமாகிவிட்டால், டெல்லி போன்று எல்லாவற்றிற்கும் மத்திய அரசிடமே கையேந்த வேண்டி இருக்கும்.. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அங்கு காணாமல் போகும்.. "கன்ட்ரோல்" மத்திய அரசுக்கு போய்விடும்.. மூன்றாவதாக, மாநில வளங்கள் அடியோடு காணாமல் போகும்..
கொங்கு மண்டலம்
நிர்வாக வசதிக்காக மாநிலங்களை பிரிப்பதாக சொல்லும் காரணங்களைவிட, இதெல்லாம் மிகவும் ஆபத்தான காரணங்கள். உதாரணத்துக்கு மாநிலங்களை 3 ஆகவே பிரித்து கொள்வோம்.. கண்டிப்பாக கொங்கு தனியாக பிரியும்.. அப்படி பிரிந்தால், மேற்கு மண்டலம் முழுவதும் மார்வாடிகள் கையில் போயிடும் அபாயம் உள்ளது.. இப்போதே அவர்கள்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.. வாக்காளர் அடையாள அட்டைகளைகூட வாங்கி வைத்திருக்கிறார்கள்..
நன்மைகள்
எனவே, டாக்டர் ஐயா, எதை மனதில் வைத்து இதை சொல்கிறார் என்று தெரியவில்லை.. தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர் டாக்டர் ராமதாஸ்.. தமிழர் நலன், தமிழ் மொழி உட்பட ஆரம்பத்தில் இருந்தே எத்தனையோ விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல் இருப்பவர்.. எனினும், இந்த விஷயம் மட்டும் தமிழகத்துக்கு நலன் பயக்குமா என்று தெரியவில்லை.. காரணம், ராமதாஸ் சொல்லும் நன்மைகளைவிட, அதன்மூலம் வரப்போகும் ஆபத்துதான் பெரிதாக நம் கண்முன் வந்து நிற்கிறது.
வளர்ச்சி
பொதுவாக, குட்டி குட்டி யூனியன் பிரதேசங்களை ஒன்றிணைத்து மாநிலமாக முயற்சிக்கதான் அனைவரும் விரும்புவர்.. இதுதான் ஒரு மாநிலத்தின் சரியான வளர்ச்சியும் கூட.. ஆனால், மாநிலங்களை பிரிப்பது என்பது, வளர்ச்சியாக அமையாது.. வேண்டுமானால், அனைத்து மக்களும் இணைந்து இந்த கோரிக்கைக்காக போராட வேண்டும், அல்லது பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அந்த முடிவின்படி இதை பரிசீலிக்கலாம். மற்றபடி, 3ஆக பிரித்து தமிழ்நாட்டை இழப்பது சாத்தியமாகாது..!