பதான் சர்ச்சை! கருப்பு உடை அணியும் திராவிடர் கழகத்தினர் வில்லன்களா? பாயிண்ட்டை பிடித்த துரை வைகோ
சென்னை: நிறைய படங்களில் கருப்பு ஆடை அணிந்து கொண்டு வில்லன்களாக நடிக்கிறார்கள். அப்படியென்றால் திராவிடர் கழகத்தினர் வில்லன்களா என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி பதான் எனும் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பேஷ்ரம் ரங் எனும் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இதில் தீபிகாவும் ஷாரூக்கும் படுகவர்ச்சியாக நடனமாடியுள்ளார்கள். இந்த பாடலில் தீபிகா படுகோன் நீச்சல் உடையிலேயே நடித்துள்ளார். அதிலும் கலர் கலரான டூபீஸ் உடைகளை அணிந்து கொண்டு நடனமாடியுள்ளார்.
பல ஆண்டுகளாக பாடுபடும் அரசியல்வாதிகள்! 30 வினாடிகளில் சாதித்த தீபிகா படுகோன்! பதான் குறித்து கஸ்தூரி
ஆபாசம்
இந்த பாடலை குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்க்க முடியாதபடி ஆபாசமாக இருப்பதாக பலர் விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில் இந்த பாடலில் காவி நிற உடையை அணிந்து கொண்டு தீபிகாவும் ஷாரூக்கும் ஆபாசமாக நடனம் ஆடியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவி நிறம் இந்துக்களின் நிறமாகும். இந்த காவி நிறத்தை ஆபாசமாக காட்டியதால் இந்துக்களின் மனதை படக்குழுவினர் புண்படுத்திவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காவி உடை
இந்த பாடலில் காவி உடை காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் படம் வெளியாவதை தடுத்து நிறுத்துவோம் என இந்துத்துவா அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது போல் மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ஷாரூக் கான் இந்த பாடலை தனது மகளுடன் அமர்ந்து பார்ப்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர், இந்துக்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் புண்படுத்தும் ஷாரூக்கான் போன்றோரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடும் எதிர்ப்பு
இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: காவி உடை அணிந்து கொண்டு வெறுப்பு பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு சாமியார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்கிறார். பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்கிறார்கள். இதெல்லாம் தவறில்லையா? ஆனால் ஒரு படத்தில் நடிகை காவி நிற உடை அணிந்தால் அது மட்டும் தவறா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற்போக்குத்தனம்
அது போல் ஷாரூக் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கையில் சமூகவலைதளங்கள் பிற்போக்குத்தனமாக இயங்குகின்றன. மோசமான கருத்துகளை வெளியிடுகிறார்கள். ஆனாலும் நான் நேர்மறையாக இருப்பேன், எனக்கு எதிராக வரும் கருத்துகள் என்னை பாதிப்பதில்லை என கூறியிருக்கிறார். இந்த நிலையில் காவி உடை சர்ச்சை குறித்து மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோவிடம் கேட்ட போது அவர் கூறுகையில் பதான் படத்தில் வரும் காவி என்பது ஒரு கலர். அதை ஒரு இயக்கம் சொந்தம் கொண்டாடுவது தவறு.
துரை வைகோ பதில்
இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என சில மாநிலங்களில் சொல்லி வருகிறார்கள். நிறைய திரைப்படங்களில் கருப்பு ஆடைகள் அணிந்து வில்லனாக நடிக்கிறார்கள். அப்படியென்றால், திராவிடர் கழகத்தினர் வில்லன்களா? சினிமா துறையை பொருத்தவரைக்கும் சுதந்திரமாக அவர்கள் படம் எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டு தடை செய்ய சொல்வது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளார்.