ஆரம்பமே அனல்.. சட்டசபைக்குள் ஓ.பன்னீர்செல்வம்.. வராமல் புறக்கணித்த எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: தமிழக சட்டசபைக்கு முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் வந்துள்ள நிலையில் முதல்நாள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸை அதிமுகவிலிருந்து பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். அதேபோல, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகிய எம்.எல்.ஏக்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறிக்கவும் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களின் சீட்களையும் மாற்ற வேண்டும் என்றும் சபாநாயகருக்கு கடிதம் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால்,ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் அளித்தனர்.
அதிமுக பொன்விழா கொண்டாட்டம் நடைபெறுவதால் காலையிலேயே எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிமுக அலுவலகத்திற்கு சென்று விட்டனர். அதே நேரத்தில் முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித்துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் இன்றைய தினம் சட்டசபை முதல்நாள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
முதல்நாள் சட்டசபை கூடியுள்ள நிலையில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பார் என்று எதிர்பார்த்தது போலவே அவரது தரப்பினர் கூட்டத் தொடரை புறக்கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications