தெற்கில் தனி ஆபரேஷன்.. எடப்பாடி போட்ட ஆர்டரால் படையெடுத்த ’தலைகள்’.. ‘அதுக்கும் மேல’ - ஓபிஎஸ் ஷாக்!
சென்னை : தென் மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பலம் குறைவுதான், ஈபிஎஸ்ஸும் தென் மாவட்டங்களை கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டைப் போக்க 'ஆபரேஷன் சவுத்' திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் நடந்த சம்பவம் ஓபிஎஸ் தரப்புக்கே ஷாக் கொடுத்துள்ளதாம்.
அதன்படி, தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முக்கியமான பொறுப்புகள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், தென் மாவட்டங்களில் எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும், பங்கேற்க வேண்டும் என தனது ஆதரவு நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார் ஈபிஎஸ்.
ஈபிஎஸ்ஸின் இந்த திட்டப்படியே, பூலித்தேவன் பிறந்தநாளன்று முன்னாள் அமைச்சர்கள் படையே தென்காசியில் திரண்டதாம்.

பூலித்தேவன் பிறந்தநாள்
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு தேனியில் இருந்து தென்காசிக்கு சாலை மார்க்கமாக சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். ராட்சத மாலையை கிரேன் மூலம் அணிவித்து 3 கிலோ மீட்டருக்கு மேல் திரண்டு நின்று அவரை வரவேற்று தொண்டர்கள் வெள்ளத்தில் நீந்த வைத்தனர் அவரது ஆதரவாளர்கள்.

ஈபிஎஸ் தரப்பின் முக்கிய புள்ளிகள்
அதேநேரம், ஈபிஎஸ் தரப்பும் சோடைபோகவில்லை. தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவன் முழு உருவச் வெண்கல சிலைக்கு மரியாதை செலுத்த எடப்பாடி பழனிசாமி வரவில்லை என்றாலும் கூட, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்காக நூற்றுக்கணக்கான கார்களில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.

ஈபிஎஸ் ஐடியா
தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் பலத்தைச் சரிக்க வேண்டும் என்பதற்காகவே, பலருக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. மேற்கு மண்டலத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாக ஈபிஎஸ் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை களையும் வகையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரை முன்னிலைப்படுத்தி வருகிறார் ஈபிஎஸ்.

500 கார்களில்
தென் மாவட்டங்களில் தனது பலத்தை அதிகரிக்கும் வகையில், அப்பகுதியில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் பங்கேற்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் ஈபிஎஸ். இதன் காரணமாக, ஓபிஎஸ் தரப்பினரின் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி நூற்றுக்கணக்கான கார்களில் நெற்கட்டும் செவலுக்கு படையெடுத்தனர் எடப்பாடி ஆதரவாளர்கள்.

முன்னாள் அமைச்சர்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, தளவாய் சுந்தரம், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் படையே நெற்கட்டும் செவலில் திரண்டனர். அப்போது பல்வேறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஈபிஎஸ் ஆதரவாளர்களும் குவிந்தனர். இதனால், ஓபிஎஸ்ஸை விட ஈபிஎஸ் தரப்பினருக்கான மாஸ் அதிகமாக இருந்தது. இது ஓபிஎஸ் டீமுக்கே ஷாக் கொடுத்துள்ளதாம்.

அடுத்த திட்டம்
மேலும், அடுத்தகட்டமாக தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தென் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கச் சொல்லி இருக்கிறாராம். நிர்வாகிகள் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்து கையைக் காட்டியதும், ஈபிஎஸ் வண்டியை எடுப்பார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications