அதிமுக வேட்பாளர்களையே தோற்கடிக்க பணம் கொடுத்தார் எடப்பாடி! லிஸ்ட் வெளிவரும்- ஓபிஎஸ் ஆதரவாளர் பகீர்!
சென்னை : சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக உட்கட்சிக்குள்ளேயே இருந்து எடப்பாடி பழனிசாமி செய்த சதிகளின் பட்டியலை வெளியிடுவேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க இருக்கிறேன் என்றும் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.
ஆர்.பி.உதயகுமார் - கோவை செல்வராஜ் இடையே கருத்து மோதல்கள் கடுமையாக நிகழ்ந்து வரும் நிலையில், ஆர்.பி.உதயகுமாரை இன்றும் காட்டமாக விமர்சித்துள்ளார் கோவை செல்வராஜ்.

கடும் மோதல்
அதிமுகவில் நிலவி வரும் இரு பிரிவு மோதலில், இரு தரப்பினரும், மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு கட்சியில் இருந்த துரோகிகளின் சதியே காரணம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்நிலையில், ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தோற்கடிக்க எடப்பாடி பழனிசாமி சதி செய்தார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

ஓபிஎஸ்ஸை கூப்பிடவே இல்லை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், "ஆட்சி மன்றக் குழுவில் ஆலோசித்து வேட்பாளர்களை அறிவிப்பதே அதிமுகவில் வழக்கம். ஆனால், எடப்பாடி பழனிசாமி கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது வேட்பாளர் தேர்வு தொடர்பாக முறையாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துப் பேசவில்லை. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியை வைத்தே கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார்.

உட்கட்சி துரோகம்
தன்னிச்சையாகவே வேட்பாளர்களை தேர்வு செய்தார். இவற்றை அன்றே ஓபிஎஸ் வெளியில் பேசியிருந்தால் கட்சி பிளவு பட்டிருக்கும். அம்மா ஆட்சி அமையவேண்டும் என்று அமைதியாக இருந்துவிட்டார் ஓபிஎஸ். துரோகங்களை தாங்கிக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் கட்சிப் பணி செய்தார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுத்து அரவணைத்துச் சென்றார்.

எடப்பாடி சதி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 80 தொகுதியில் அதிமுக தோல்வி அடையக் காரணம் எடப்பாடி பழனிசாமி செய்த உட்கட்சி துரோகம் தான். தேர்தலில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றவர்கள் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக மாற்றுக்கட்சி வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்து சதி வேலை செய்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்து சதி செய்தார் என்ற பட்டியலை நான் வெளியிடுவேன்" எனத் தெரிவித்தார்.

கோவில் என்ற பெயரில் சுடுகாடு
மேலும் பேசிய அவர், மதுரையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டுகிறேன் என்று கூறி பணம் வசூல் செய்தார். கோவில் கட்டிய இடத்தில் தனது தந்தையை அடக்கம் செய்து டிரஸ்ட் நடத்தொ வருகிறார். இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார். ஜெயலலிதாவுக்கு கோவில் என்ற பெயரில் தனது தந்தைக்கு சுடுகாடு கட்டுவதுதான் தர்மமா?

ஆர்.பி.உதயகுமார் மீது புகார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது வருமானத்தை மீறி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துத்துள்ளார். அமைச்சரான பின் அரசாங்க நிலங்களை எத்தனை பேருக்கு குறைந்த விலையில் பட்டா போட்டு கொடுத்தார் என்ற பட்டியல் உள்ளது. ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப் போகிறேன்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications