மூக்கை நுழைக்க முயற்சி வேண்டாம்! இறைவன் பதிலடி கொடுப்பார்! ஆதீன விவகாரத்தில் எடப்பாடி எச்சரிக்கை!
மயிலாடுதுறை : ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க அரசு முயற்சி செய்வதாகவும், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தமிழக அரசு தலையிடக் கூடாது என தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும்.
இந்த ஆண்டு வழக்கம் போல தர்மபுரி ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் நடந்தது என்றே கூறலாம்.

தருமபுரம் ஆதின விவகாரம்
ஆனால் அதற்கு முன்னதாக பல்வேறு சிக்கல்களையும், வாதங்களையும் ஆதீனத்தின் பட்டின பிரவேசம் ஏற்படுத்தியது. குறிப்பாக மனிதனை மனிதனே பல்லக்கில் சுமக்கக் கூடாது என திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு தடை விதித்தது. தொடர்ந்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஜீயர்கள், பல்வேறு ஆதீனங்கள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

எடப்பாடி பழனிசாமி ஆசி
இதையடுத்தே ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.மேலும் இந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்திலேயே ஆதீன பிரவேசத்தை அனுமதிக்க வேண்டும் என நேரடியாக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இன்று தருமபுரம் ஆதீனத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

சிறப்பான வரவேற்பு
கார் மூலம் தருமபுரம் ஆதீனத்திற்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் ஆசிகள் வழங்கி பிரசாதம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணியன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக தர்மபுரம் ஆதினத்துடன் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். தொடர்ந்து பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதரவாக பேசியதற்கு தர்மபுரம் ஆதீனம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

திமுக அரசு
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி," மதம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் தமிழக அரசு தலையிடக் கூடாது. எம் மதத்தையும் சம்மதம் என்று பார்க்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் வழிமுறைகளில் நாம் தலையிடக் கூடாது. ஆதின விவகாரங்களில் திட்டமிட்டு திமுக அரசு மூக்கை நுழைப்பது கண்டிக்கத்தக்கது. சுமார் 500 ஆண்டுகாலம் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், ஆனால் தற்போது மட்டும் அதனை நிறுத்த திமுக அரசு முயல்கிறது. யார் தவறு செய்தாலும் அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார்" என பேசினார்












Click it and Unblock the Notifications