நிலுவையில் இருந்த 4 வழக்குகளிலும் ஜாமீன்.. விரைவில் சிறையிலிருந்து வெளிவருகிறார் சவுக்கு சங்கர்
சென்னை: நான்கு நிலுவை வழக்குகளில் சிறையிலிருந்த 'சவுக்கு சங்கருக்கு' எழும்பூர் நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனையடுத்து நிலுவையில் இருந்த 4 வழக்கிலும் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் சவுக்கு சங்கர் இன்றோ அல்லது நாளையோ சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுக்கு சங்கர் மீதான புதிய வழக்குகளை வாபஸ் பெற்று அரசு விடுதலை செய்ய வேண்டும்: சீமான் அப்பீல்
கைது
கடந்த சில நாட்களாகவே நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு கருத்துக்களை கூறி வந்திருந்தார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், "உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது" என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மதுரை உயர்நீதிமன்றம். இது குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு சவுக்கு சங்கர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக கூறி 6 மாத சிறை தண்டனையை வழங்கியது.
ஜாமீன்
இதனையடுத்து அவர் செப்டம்பர் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து சில காரணங்களுக்காக கடலூர் சிறையில் மாற்றப்பட்டார். இவ்வாறு இருக்கையில், இந்த சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையில், நீதிமன்றம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல என்றும், ஆனால் முறையான ஆதாரங்களுடன் விமர்சிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
மீண்டும் கைது
மேலும், ஆதாரமில்லாமல் எப்படி விமர்சனம் வைத்தார்? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். அதேபோல விசாரணை முடியும் வரை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் கடந்த 11ம் தேதி விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சிறையில் வைத்தே அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஜாமீனில் விடுதலை
அதாவது, கடந்த 2020ம் ஆண்டு பதிவான 3 வழக்குகள் மற்றும் 2021ம் ஆண்டு பதிவான 1 வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் போலீஸ் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் அவர் சிறையிலிருந்து விடுதலையாவதில் சிக்கல் மேலெழுந்தது. இந்நிலையில், இன்று இது தொடர்பான வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் 4 வழக்குகளிலிருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தது. மேலும், வழக்கு குறித்து பொது வெளியில் எங்கும் பேசக்கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதனையடுத்து அவர் இன்று அல்லது நாளை காலை சிறையிலிருந்து வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.