உயர் அதிகாரிகளின் ஈகோ?- அந்தரத்தில் நிற்கும் 4 மாவட்ட எஸ்.பிக்களின் இடமாற்றம்: குழப்பத்தில் போலீஸார்
ஐபிஎஸ் அதிகாரிகள் 12 பேர் இடமாற்ற உத்தரவு வந்து 10 நாட்களை நெருங்கும் நிலையில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பழைய பணியிலேயே தொடர்வதால் போலீஸார் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளில் மாவட்ட எஸ்பிக்கள் பலரது இடமாற்றமும் இருந்தது. இதில் 4 மாவட்ட எஸ்பிக்கள் இடமாற்றம் நடக்காமல் உள்ளது. தாங்கள் பழைய இடத்திலேயே பணியாற்றுவதா? அல்லது புதிய இடத்துக்கு போவதா எனப்புரியாமல் எஸ்.பிக்கள் தடுமாறி நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உயர் அதிகாரிகள் இருவரின் கவுரவப்பிரச்சினையால் நிற்பதாக பொலீஸ் வட்டாரத்தில் தகவல் பேசப்படுகிறது.

தமிழக காவல்துறையின் அதிகார மையம்
தமிழக காவல்துறையில் ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் டிஜிபி சைலேந்திர பாபு. இவர் அனைத்து காவல்துறைக்கும் தலைவர். இவருக்கு கீழ் பல்வேறு டிஜிபிக்கள். உளவுத்துறை ஏடிஜிபி, மண்டல ஐஜிக்கள், மாநகர ஆணையர்கள், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்டோர் வருவார்கள். இதில் சென்னை மாநகரம் தனி அந்தஸ்து உள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மத்திய அரசின் அயல்பணிக்குச் சென்றதால் அப்பதவிக்கு சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் நியமிக்கப்பட்டார். கோவை ஆணையர் மாற்றப்பட்டார் அவர்களுடன் சேர்த்து 12 ஐபிஎஸ் அதிகாரிகள் நவ18 ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் நெல்லை எஸ்.பி. டிஜிபி அலுவலக ஏஐஜி, புளியந்தோப்பு துணை ஆணையர், வேலூர் எஸ்.பி ஆகிய நால்வரும் மாற்றப்பட்டனர். இவர்கள் எஸ்.பி அந்தஸ்து அதிகாரிகள்.

நான்கு மாவட்ட எஸ்.பிக்கள் இடமாற்றம் அந்தரத்தில்
மாற்றப்பட்ட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் 1.சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன்,வேலூர் மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டார். 2.நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக மாற்றப்பட்டார். 3. சென்னை நிர்வாக பிரிவு ஏஐஜி சரவணன், நெல்லை மாவட்ட எஸ்பி ஆக மாற்றப்பட்டார், 4. வேலூர் மாவட்ட எஸ்பி சென்னை நிர்வாகப் பிரிவு ஏஐஜியாக மாற்றப்பட்டார்.

இடமாற்றம் இல்லை, பதிலும் இல்லை குழப்பத்தில் போலீஸார்
இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவை உள்துறைச் செயலர் பிறப்பித்து 10 நாட்கள் நெருங்கிய நிலையில் மேற்கண்ட 4 எஸ்பிக்கள் அவர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பொறுப்பேற்கவில்லை. இதனால் போலீஸார் குழப்பத்தில் உள்ளனர். காவல் பணியும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன காரணம்
இதில் இடமாற்றத்தை மறுத்து எஸ்.பிக்கள் போகவில்லையா எனக் கேட்டபோது எஸ்,பிக்கள் யாரும் மறுக்கவில்லை. ஆனால் ஒரு எஸ்,பி ரிலீவ் ஆனால் தான் அடுத்தவர் அவர் இடத்திற்கு போக முடியும் அவர் ரிலீவ் ஆகாததால் ஒவ்வொருவரும் இடமாற்றம் செய்ய முடியாமல் சங்கிலி தொடர்போல் நிற்கிறது என்கின்றனர். பொதுவாக இதுபோன்ற நேரங்களில் பொறுப்பேற்பதில் சிரமம் உள்ள அதிகாரிகள் முதலில் பொறுப்பேற்றுவிட்டு பின்னர் உயர் அதிகாரிகளிடம் தங்கள் சிரமத்தை முறையிட்டு பின்னர் இடமாற்றத்தை ரத்து செய்வார்கள்.

இது முதல்முறை என வியக்கும் அதிகாரிகள்
ஆனால் இடமாற்றம் செய்யப்பட்ட 4 எஸ்பிக்கள் பொறுப்பேற்காமல் இருப்பது, அதிலும் 3 இடங்கள் நேரடியாக சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது எனும்போது காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரச்சினை என்ன என்று போலீஸ் தரப்பில் விசாரித்தபோது நெல்லை எஸ்.பி தனது இடத்திலிருந்து ரிலீவ் ஆகாமல் இருக்கிறார். அதனால் புளியந்தோப்பு துணை ஆணையர் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து வேலூர் எஸ்.பியாக செல்ல முடியவில்லை.
புளியந்தோப்பு எஸ்.பி ராஜேஷ் கண்ணன் செல்ல முடியாததால் வேலூர் எஸ்.பி செல்வகுமார் ரிலீவ் ஆகி சென்னை டிஜிபி அலுவலக ஏஐஜியாக பொறுப்பேற்க முடியவில்லை. சென்னை டிஜிபி அலுவலக ஏஐஜி சரவணன் நெல்லை எஸ்.பி செல்லாததால் அங்கு போய் பதவி ஏற்க முடியாத நிலை என சங்கிலித்தொடர்போல் 4 எஸ்பிக்கள் இடமாற்றம் நிற்பதாக காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நெல்லை எஸ்.பியை ரிலீவ் ஆகாமல் தடுப்பது எது
பிரச்சினையின் 'மூலம்' எதுவென்று காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது நெல்லை எஸ்.பி ரிலீவ் ஆகவில்லை, அவர் ரிலீவ் ஆகாமல் இருக்க என்ன காரணம் என்கிற கேள்வி ஓடுகிறது. அவருக்கு கட்டளையிட்ட அதிகாரி யார், அல்லது அவரே ரிலீவ் ஆகாமல் இருக்கிறாரா? சட்டம் ஒழுங்கு டிஜிபி இடமாற்றம் செய்ய பரிந்துரைத்து அரசு உத்தரவு வந்தப்பின்னும் இதுபோன்ற கௌரவப்பிரச்சினையில் நிறுத்தி வைக்கப்பட்டு பேசுபொருளாக மாறியுள்ளதை யாரும் கவனிக்கவில்லையா? என்பது தெரியவில்லை என்கின்றனர் விவரமறிந்த காவல் அதிகாரிகள்.

அந்தரத்தில் நிற்கும் டிரான்ஸ்ஃபர், குழப்பத்தில் இருக்கும் அதிகாரிகள்
இந்தப்பிரச்சினை எங்கிருந்து கிளம்பியது, உயர் அதிகாரிகள் உத்தரவு ஏதும் போட்டு எஸ்.பி ரிலீவ் ஆகாமல் இருக்கிறாரா? ஒருவர் முடிவை மற்றொருவர் மாற்ற நினைக்கிறாரா? இதுபோன்ற ஈகோ பிரச்சினை காவல்துறைக்கு நல்லதா என்கிற கேள்வியை காவல்துறையினர் எழுப்புகின்றனர். நமக்கும் நியாயமாகத்தான்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டால் பிரச்சினைக்கு தீர்வு வரும்.












Click it and Unblock the Notifications