தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி 1 நாள் பயிற்சி வகுப்பு! இளைஞர்களுக்கு கொங்கு ஈஸ்வரன் அழைப்பு!
சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி தாம் நடத்தும் 1 நாள் பயிற்சி வகுப்பில் பொதுமக்களும், இளைஞர்களும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு'
அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நேர்மையான ஒளிவு மறைவற்ற வகையில் அரசு நிர்வாகம் செயல்படுவதை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இந்த சட்டம் சம்பந்தமாக ஒரு சிலரை தவிர பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் மற்றும் மனுக்களை நிராகரிப்பதற்கான காரணங்கள், நடைமுறைகள் மற்றும் அரசு நிதி பயன்பாடுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இந்த சட்ட பயிற்சி பயன்படும்.
தகுதி இருந்தும்
ஒரு சில இடங்களில் லஞ்சம் கொடுக்காமல் முறையான தகுதி இருந்தும் பயன் கிடைக்காத போது ஏற்படும் காலதாமதத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து அதற்கான காரணங்கள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரிந்து கொள்ளும்போது பொதுமக்கள் தங்களுடைய தேவையை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள இது போன்ற சட்ட பயிற்சி வகுப்பு பொது மக்களுக்கு பயன்படும். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி அரசு அலுவலகங்களில் உள்ள பொது ஆவணங்களையும் பொதுமக்கள் ஆய்வு செய்ய வழிவகை உள்ளது.
விழிப்புணர்வு இல்லை
பொது நல திட்ட பணிகள் நடைபெறும் பொழுது அதில் பயன்படுத்தும் பொருட்களின் மாதிரிகளை கேட்டு பெறவும் வழிவகை உள்ளது. திருச்செங்கோடு தொகுதியில் அரசு அலுவலகத்தில் கொடுக்கும் பல மனுக்களுக்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக மனு வந்த படி உள்ளது. பலருக்கு இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயன்படுத்தும் முறை தெரியாமல் இருக்கும் காரணத்தாலும் அவர்களுடைய தேவையை அவர்களே நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
இளைஞர்களே வாருங்கள்
எனவே பொதுமக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நேர்மையான மற்றும் ஒளிவு மறைவற்ற அரசு நிர்வாகம் அமைய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்திலும் சென்னையைச் சார்ந்த அறப்போர் இயக்கத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு வரும் சனிக்கிழமை (03-12-2022) காலை 10 மணிக்கு நாமக்கல் ரோடு திருச்செங்கோடு மலை ரோடு எதிரில் அமைந்துள்ள ரோட்டரி ஹாலில் (சாந்தி மஹால்) நடைபெற உள்ளது. இதுசமயம் பொதுமக்களும், சட்ட ஆர்வலர்களும், தன்னார்வலர்களும், இளைஞர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு உண்டான தகவல் அறியும் ஊரிமை சட்ட விழிப்புணர்வு பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.