டாஸ்மாக் மதுபானங்கள் மீண்டும் விலை உயர்வு..? காரணம் என்ன? - உத்தரவால் குடிமகன்கள் கடும் அதிர்ச்சி..!
சென்னை : தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விரைவில் மதுபானங்களுக்கு ரூ. 10 கூடுதலாக கொடுக்க வேண்டிய முறை அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் மதுபான பாட்டிலை திரும்பக் கொடுத்தால் ரூ. 10 திருப்பி வாங்கிக் கொள்ளலாம் என்ற முறை நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், விரைவில் அனைவருமே ரூ. 10 கூடுதலாக செலுத்தி மதுபானம் வாங்கும் நிலை வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
என்னங்க சொல்றீங்க.. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை குறைஞ்சு இருக்கா! காரணம் என்ன தெரியுமா
நீலகிரி மாவட்டத்தில்
நீலகிரி உள்ளிட்ட மலைப் பிரதேசம் சார்ந்த மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வன விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மது பாட்டில்களில், 'ஈசி 10' என்னும் ஸ்டிக்கர் ஒட்டி 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடவடிக்கை கொண்டுவரப்பட்டது.
எதிர்த்து வழக்கு
பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைத்துவிட்டு 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விரிவுபடுத்த வேண்டும்
அப்போது டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். இந்த திட்டத்தை வகுத்து வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மற்ற மாவட்டங்களில்
இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் ஆகிய இடங்களிலும், டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் மதுபிரியர்கள் அதை அருந்திவிட்டு காலி பாட்டிலை திருப்பி கொடுத்தால் அதற்கு ரூ.10 கொடுக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு மதுபிரியர்களுக்கு தெரியும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், மலை, காட்டுப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜூலை 15ஆம் தேதிக்குள் திட்டம் வகுக்குமாறு தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதால், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மதுப் பிரியர்கள் கவலை
இதனால், இனிமேல் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டில் மதுபானம் வாங்கும்போதும் 10 ரூபாய் கூடுதலாக தர வேண்டியிருக்கும் என்பதால் மதுப் பிரியர்கள் கவலையடைந்துள்ளனர். பாட்டிலை மீண்டும் கொடுத்துவிட்டு 10 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் தான் என்றாலும் கூட, முதலில் 10 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டும் என்பது மதுப் பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான்
கடந்த மார்ச் மாதம் தான் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. நடுத்தர மது வகைகளில் 20 முதல் 60 ரூபாய் வரையும் குறைந்த விலை மது விலை 10 முதல் 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வு காரணமாக நடுத்தர மது வகைகளை அருந்தி வந்தவர்களும் குறைந்த விலை மதுவுக்கு மாறி உள்ளனர். இதன் காரணமாக மதுபானங்களின் விற்பனை குறைந்துள்ளது. சுமார் 4-6% வரை விற்பனை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 10 ரூபாய் விலை உயர்வு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.