திமுகவை வீழ்த்த.. அதிமுக ஒன்று சேர்ந்தேயாகனும்.. அண்ணாமலையுடன் சேர்ந்து சிடி ரவி அளித்த கறார் பேட்டி
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கட்டப்பஞ்சாயத்து , பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டதாக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க அதிமுக ஒன்றாக இணைந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சார களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ.பன்னீர் செல்வம் அணியும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிக்குழுவையும் நியமனம் செய்துள்ளது.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை இரு அணிகளுமே கேட்டால் சின்னம் கண்டிப்பாக முடங்கும் சூழ்நிலை உருவாகும். சின்னம் முடங்கினால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவருமே சுயேச்சை சின்னத்தில்தான் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.
பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்திற்காக என்பது தெளிவாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் டெல்லி சென்று இருந்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் இன்று காலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.
இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசி சமாதனப்படுத்தும் முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பு குறித்த சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.டி. ரவி, திமுக ஒரு தீய சக்தி என்று அதிமுகவின் முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் இருந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டது. மக்கள் விரோத அரசாக திமுக உள்ளது. பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்ந்து விட்டது. மக்கள் விரோத அரசாக திமுக செயல்படுகிறது. கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து விட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்க்க வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் அதற்கு அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் கூறியுள்ளார். அவரது கருத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அவர்களின் முடிவைப் பொருத்து வரும் 7ஆம் தேதி எங்களின் நிலைப்பாட்டினை அறிவிப்போம் என்ற பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications