கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்! அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன? தமிழகத்தில் ஆபத்து ஏற்படுமா
சென்னை: கொரோனா வைரஸ் குறித்த அச்சமே மக்களிடம் இருந்து இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், இப்போது கேரளாவில் சிலருக்குத் தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த கொரோனா வைரசையே நம்மால் இன்னும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. வேக்சின் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பாதிப்பை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வைத்துள்ளோம்.
விக்னேஷ் லாக் அப் மரணம்... 5 காவலர்களை உடனே சஸ்பென்ட் பண்ணுங்க - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இதனிடையே கேரளாவில் சில மாவட்டங்களில் தக்காளி வைரஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கேரளா
கேரள மாநிலம் கொல்லம், ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குக் காய்ச்சல், உடல் வலி, கை கால்கள் வெளிர் நிறமாக மாறுவது உள்ளிட்ட பல அறிகுறிகள் இருப்பதாகவும் வெயில் காலங்களில் பரவும் அம்மை நோய் போல இது ஒரு புதிய வைரஸ் எனக் கூறப்படுகிறது.
தக்காளி காய்ச்சல்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கேரளாவில் இதுவரை 82 பேருக்கு இந்த தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்த தக்காளி காய்ச்சல் பரவுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் குறித்த பாதிப்புகள் எதுவும் இல்லை என்றே சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சரி, இந்த தக்காளி காய்ச்சல் என்றால் என்னவென்று பார்க்கலாம்.
அங்கன்வாடி மையங்கள் மூடல்
தக்காளி காய்ச்சல் என்பது எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத ஒரு வகை காய்ச்சலாகும். இருப்பினும், இது வைரஸ் காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலின் ஒரு வகையா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. கொல்லம், நெடுவத்தூர், அஞ்சல் மற்றும் ஆரியங்காவு மாவட்டங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கேரளாவில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு, அதிகாரிகள் கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிட்டத்தட்ட தக்காளியின் அளவு கொப்பளங்கள் மற்றும் தோல் எரிச்சல் ஏற்படும். மேலும், நாக்கில் நீரிழப்பும் ஏற்படும். இவை தான் முக்கிய அறிகுறிகள் ஆகும். சில நோயாளிகள் தங்கள் உடலில் ஏற்பட்ட கொப்பளங்களில் இருந்து புழுக்கள் வெளியேறியதாகக் கூறினர். மேலும், அதிக காய்ச்சல், உடல்வலி, மூட்டு வீக்கம், சோர்வு, தக்காளி அளவில் கொப்பளம், வாய் எரிச்சல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
சிகிச்சை முறை
வீட்டில் உள்ள குழந்தைக்கு இதுபோன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அணுகவும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிறையத் திரவங்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். சொறி சொறிந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மக்கள் தூரத்தைப் பராமரிக்க வேண்டும். நோயாளி மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் தூய்மையைப் பேணுவது முக்கியம். காய்ச்சல், பல சமயங்களில், ஒரு வாரம் நீடிக்கும் என்பதால், சரியான ஓய்வு எடுக்க வேண்டும்.