900 மாவட்டங்களா? அமெரிக்காவில் போய் தப்பாக கணக்கு காட்டிய அண்ணாமலை.. நோட் பண்ணீங்களா! உண்மை என்ன?
சென்னை: இந்தியாவில் 900 மாவட்டங்கள் உள்ளன என்று தவறான தகவலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமெரிக்காவில் பேசி இருக்கிறார்.
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அமெரிக்கா சென்றார். தனது மேல்படிப்பிற்காக 12 நாட்கள் அவர் அமெரிக்காவில் தங்கி இருந்தார். அங்கே இந்தியர்கள் பலரை சந்தித்து பேசினார்.
இதில் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாஜக தலைவர் அண்ணாமலை ஆற்றிய உரையில், எல்லோரும் வேறு மாதிரி யோசித்துக்கொண்டு இருந்த போது மோடி மட்டும்தான் புதிய பாணியில் யோசித்தார். இந்தியாவில் 900 மாவட்டங்கள் உள்ளன. அந்த 900 மாவட்டங்களில் பல பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளன. அந்த பின்தங்கிய மாவட்டங்களின் லிஸ்டுகளை எடுங்கள். அந்த லிஸ்டை வைத்து பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுங்கள்.
இப்படி பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றினால் தானாக நாடு முன்னேறும் என்றார். இந்த மாவட்டங்களை குறிக்கோள் கொண்ட மாவட்டங்கள் (Aspirational District Programme) என்று அவர் பட்டியலிட்டார். மொத்தம் 100 மாவட்டங்களை இந்த பட்டியலுக்கு கீழ் அவர் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்கள் அந்த லிஸ்டில் வந்தன. அதற்கு நிறைய தனி கவனம் கொண்டு வரப்பட்டன. அந்த மாவட்டங்களுக்கு என்று புது கவனம் செலுத்தப்பட்டது.
வளர்ச்சி குறியீடுகளின் அடிப்படையில் இந்த மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. குழந்தை பிறப்பு விகிதம், குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு உள்ளிட்ட பல விஷயங்களை கண்டுபிடித்து, அதை குறி வைத்து மாவட்டங்களை முன்னேற்றும் திட்டங்களை கொண்டு வந்தார். கடந்த 70 வருடங்களில் எந்த அரசும் இதை செய்தது இல்லை. எந்த பிரதமரும் இதை செய்தது இல்லை. தற்போது நம் பிரதமரின் நடவடிக்கையால் இங்கு நிதி ஆயோக் மூலம் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன, என்று அண்ணாமலை தனது பேச்சில் குறிப்பிட்டார்.
ஆனால் அண்ணாமலை தனது பேச்சில் குறிப்பிட்ட சில விஷயங்கள் இதில் தவறு ஆகும். இந்தியாவில் 900 மாவட்டங்களே இல்லை. இந்தியாவில் மொத்தம் 768 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மாவட்டங்கள் எண்ணிக்கை இதுவரை 300 என்ற அளவை எல்லாம் தொட்டதே இல்லை. ஆனால் அண்ணாமலை 900 மாவட்டங்கள் இருப்பதாகவும் அதில் 100 மாவட்டங்கள் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சேர்த்து இத்தனை மாவட்டங்கள் மட்டுமே உள்ளன.
அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு மாவட்டங்கள் Aspirational District Programmeல் தேர்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்புட்டார். அது உண்மை. தமிழ்நாட்டில் இருந்து 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் அதை விட பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்துதான் அதிக பின் தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. உதாரணமாக மத்தியப் பிரதேசம் (8), ஜார்கண்ட் (19 - அப்போது பாஜக ஆட்சி, உத்திர பிரதேசம் (8) தேர்வு செய்யப்பட்டன.
இது ஒருவகையில் வடமாநிலங்களை விட தென் மாநிலங்கள் முன்னேறி உள்ளன என்பதை காட்டுவதாகவே இருக்கிறது.