ரசிகர்களை மதிக்காத பிசிசிஐ.. மிட் நைட்டில் அறிவிக்கப்பட்ட இந்திய அணி.. வீரர்களை தேர்வு செய்தது யார்?
சென்னை: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணியில் ஏன் சீனியர் வீரர்கள் இடம்பெறவில்லை, எந்தெந்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளார்கள், துணை கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட காரணம் என்ன, எந்தக் குழு அணியை தேர்வு செய்தது என்ற எந்த தகவலும் பிசிசிஐ தரப்பில் வெளியிடப்படவில்லை. ரசிகர்களை மதிக்காமல் செயல்பட்டு வரும் பிசிசிஐ நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால், சொந்த மண்ணில் இலங்கை அணியை இந்திய அணி வீழ்த்துமா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான அணியை தயார் செய்வதற்கான நேரமும் கூடியுள்ளது. 2013ம் ஆண்டுக்கு பின் அனைத்து ஐசிசி தொடர்களிலும் சொதப்பி வரும் இந்திய அணி, சொந்த மண்ணிலாவது வாகை சூடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்திய அணி தேர்வு
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டிநொ மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியா டி20 தொடருக்கான கேப்டனாகவும், ரோகித் சர்மா ஒருநாள் தொடருக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் திருமணம் காரணமாக டி20 தொடருக்கு கேஎல் ராகுல் தேர்வு செய்யப்படவில்லை என்று பார்க்கப்படுகிறது.

யார் அணியை தேர்வு செய்தது?
ஆனால் ஒருநாள் அணியில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துணை கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் டி20 அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

எந்தெந்த வீரர்கள் காயம்?
ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தாமல், எந்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது, எந்த வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார்கள், குஜராத் தேர்தலில் பம்பரமாக சுழன்று மனைவிக்காக பிரச்சாரம் செய்த ஜடேஜா ஏன் இதுவரை அணிக்கு மீண்டும் திரும்பவில்லை, யார் இந்த அணியை தேர்வு செய்தார்கள் என்ற எந்த விளக்கமும் பிசிசிஐ தரப்பில் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே டி20 உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்த குழு மொத்தமாக நீக்கப்பட்ட நிலையில், அடுத்த தேர்வுக் குழு குறித்த எந்த தகவலையும் பிசிசிஐ வெளியிடவில்லை.

ரசிகர்களை மதிக்காத பிசிசிஐ
தேர்வுக் குழு தேர்வு செய்யாத அணி என்பதால், வீரர்களை பாதுகாத்து சரியான பயன்படுத்தாமல் முடியாத நிலை உருவாகியுள்ளது. டி20 உலகக்கோப்பைத் தோல்விக்கு பின், பிசிசிஐ மர்மம் நிறைந்த அமைப்பாக மாறியுள்ளது. அதேபோல் சர்வதேச அளவில் அதிக பொருளாதாரத்தை ஈட்டும் பிசிசிஐ, அதற்கு காரணமாக ரசிகர்களை மொத்தமாக மதிக்காமல் செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications