11 ஆம் வகுப்பு தேர்வு முடிவிலும் அசத்திய மாணவிகள்.. மாணவர்களை விட அதிகளவு தேர்ச்சி!
சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
இந்தாண்டு 95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 1 தேர்வு முடிவில் 98 % தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், 97.9 % தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 97.6 % தேர்ச்சியுடன் கோவை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

மாணவிகள் அதிகம்
மேலும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் 90.6 சதவிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.9 சதவிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்விலும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12 ஆம் வகுப்பிலும்..
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. இதில் மாணவிகள் 93.64% தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 88.57% மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இது மாணவர்களை விட 5.07% அதிகமாகும்.

10ஆம் வகுப்பு ரிசல்ட்
இதைத்தொடர்ந்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 29ஆம் தேதி வெளியானது. இதில் 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சியடைந்தள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.1 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.

மாணவிகளே அதிகம்
இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவிலும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.5 சதவீதமும் மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இது மாணவர்களை விட 3.2% அதிகமாகும்.












Click it and Unblock the Notifications