நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா.. சென்னையில் நாளை முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை!
சென்னை: சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் வீடு வீடாக சென்று சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 4 இலக்கத்தில் இருந்து வருகிறது.
சட்டசபைத் தேர்தல் காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் கூடியதாலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தாலும் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
காய்ச்சல் பரிசோதனை
இதனால் தேர்தலுக்கு முன்பே வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தை மீண்டும் கையில் எடுக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக 16 ஆயிரம் களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் மீண்டும் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணியாளர்கள்
மேலும் 100 மருத்துவர்கள், 4 ஆயிரம் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களை நியமித்தது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவிய போது மேற்கொள்ளப்பட்ட வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை, கண்காணிப்பு, வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்படுகிறது.
வீடு வீடாக
தேர்தல் நேரத்தில் இதனை செயல்படுத்த முடியாததால் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது காய்ச்சல் பரிசோதனை செய்யும் போது அது பலனை அளிக்காது என்பதால் அதிகாரிகள் ஒத்தி வைத்தனர். தற்போது தேர்தல் முடிந்த நிலையில் நாளை முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
சென்னையில் எங்கு அதிகம்
பாதிப்பு அதிகம் உள்ள தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு, ராயபுரம், அம்பத்தூர் மண்டலங்களில் அதிகமான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பரிசோதனை கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சளி, இருமல்
லேசான காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பும், தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.