நாய் கடித்துவிட்டதா? இதை செய்ய தவறிவிடாதீர்கள் - ரேபீஸை தடுக்க முதல் ஒரு மணி நேரமே மிக முக்கியம்
சென்னை: கேரளாவில் நாய் கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய் பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ரேபீஸில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது பற்றி இங்கு காண்போம்.
கேரளாவில் ரேபீஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. நாய் கடிக்கு தடுப்பூசி போட்டால் ரேபீஸ் பாதிப்பை தடுத்து விடலாம் என பொதுவான கருத்து இருக்கும் நிலையில், கேரளாவில் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் இந்தக் கூற்றை பொய்யாக்கி வருகின்றன.
ஏனெனில் அம்மாநிலத்தில் நாய் கடிக்கும் முறையாக ரேபீஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் கூட உயிரிழந்து வருகிறார்கள். நடப்பாண்டில் மட்டும் ரேபீஸுக்கு கேரளாவில் 20 பேர் பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முறையாக ரேபீஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
இன்றைக்கு கூட, கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த 12 வயது மாணவி அபிராமி, மூன்று முறை தடுப்பூசி எடுத்துக் கொண்ட போதிலும் ரேபீஸ் வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இந்நிலையில், இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:

ஆராய்ச்சி வேண்டாம்
நாய் கடித்துவிட்டால் நம்மில் பலர் உடனே மருத்துவமனைக்கு செல்வதையே முதலில் செய்கின்றனர். மருத்துவமனைக்கு சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்பு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் முதல் ஒரு மணிநேரத்தில் நாம் செய்யும் விஷயங்கள்தான் நம் உயிரை காப்பாற்றும்.

சோப்பு தண்ணீர் ரேபீஸுக்கு எதிரி
நாய் கடித்தால் அது ரேபீஸ் பாதித்த நாயா அல்லது சாதாரண நாயா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. நாய் கடித்த உடனேயே அருகில் எங்காவது டேப் (Tap) இருந்தால் அதனை திறந்து நாய் கடி காயங்களில் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வெறும் தண்ணீரில் கழுவிய பின்னர், சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். 15 நிமிடங்கள் இதனை செய்ய வேண்டும். ஒருவேளை சோப்பு இல்லாவிட்டால், வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.

ரேபீஸ் முழுமையாக அழியும்
நாய் பற்கள் பட்டு துளை போல காயம் ஏற்பட்டிருந்தால் அந்த காயத்துக்குள் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டியது அவசியம். அதன் பின்னர் டெட்டால் போன்றவற்றை காயத்தின் மீது ஊற்றி நன்றாக கழுவிவிட வேண்டும்.
இப்படி செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும்.

தடுப்பூசியில் அலட்சியம் வேண்டாம்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரமாக எடுக்கிறோமோ அந்த அளவுக்கு ரேபீஸ் கிருமியை நாம் அழித்துவிடலாம். அதன் பின்னர் மருத்துவர் கூறும் நாட்களில் சென்று அடுத்தடுத்து 3 டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாய் கடி காயங்களுக்கு பொதுவாக தையல் போட மாட்டார்கள். காயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

முகத்தில் கடித்தால் அதிக கவனம்
முறையாக தடுப்பூசி செலுத்தியும் ரேபீஸால் பாதிக்கப்பட்டவர்கள், மேற்கண்ட இந்த வழிமுறையை பின்பற்றி இருக்க மாட்டார்கள். இல்லையெனில் நாய் அவர்களின் முகத்தில் கடித்திருக்கும். முகத்தில் கடித்தால் உடனடியாக வைரஸ் மூளைக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். ஆனால், மேற்குறிப்பிட்ட முதல் ஒரு மணிநேர முதலுதவியை செய்துவிட்டால் அதற்கான வாய்ப்பும் கிடையாது. இவ்வாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications