"கடன் வாங்கி மெட்ரோ எதுக்கு! முதலில் நடந்துபோக சாலையை ஒழுங்கா போடுங்க எசமான்களே!" சாட்டை துரைமுருகன்
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மெட்ரோ குறித்த பல அறிவிப்புகள் இருந்தது
சென்னை: இன்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதில் மெட்ரோ விரிவாக்கம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. இது குறித்த அறிவிப்பைச் சாட்டை துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மூன்றாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த முறையும் காகிதமில்லா பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த இந்தப் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது.

போக்குவரத்து
குறிப்பாக, சென்னையில் இப்போது இரு வழித்தடங்களில் மெட்ரோ செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய வழித்தடங்களில் மெட்ரோ இயங்க இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் ஒரு பக்கம் நடைபெறுகிறது. இதேபோல மற்ற நகரங்களுக்கும் மெட்ரோவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு மெட்ரோ கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பிடிஆர் அறிவித்தார்.

சென்னை மெட்ரோ
இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர், "சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மெட்ரோ
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது. ஜவுளி, தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தித் துறை என பல் தொழில்களின் இருப்பிடமாகவும் தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மதுரை மெட்ரோ
தூங்கா நகரமான மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும்.இந்த இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு,பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்று கூறியிருந்தார்.

சாட்டை துரைமுருகன் சாடல்
மற்ற நகரங்களுக்கும் மெட்ரோ விரிவுபடுத்தப்படுவதைப் பலரும் வரவேற்று வருகின்றனர். அதேநேரம் சிலர் மாநிலத்தின் நிதிநிலையைச் சுட்டிக்காட்டி விமர்சித்தும் வருகினறனர். இதற்கிடையே நாம் தமிழர் ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "7 லட்சம் கோடி கடன் வாங்கி 9000 கோடிக்கு மெட்ரா ரயில் யார் கேட்டது? முதலில் நடந்து போகச் சாலையை ஒழுங்கா போடுங்க எசமான்களே" என்று விமர்சித்துள்ளார். அதற்கு இணையத்தில் பலரும் பல விதமான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

தமிழக கடன்
தமிழ்நாடு அரசு வரும் நிதியாண்டில், 1 லட்சத்து 43 ஆயிரத்து 198 கோடி ரூபாய் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வரும் நிதியாண்டின் இறுதியில் அரசின் கடன் 7 லட்சத்து 26 ஆயிரத்து 29 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் கூறியிருந்தார். இருப்பினும், இது 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளதாகவும் வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டுகளில் குறைந்து, 2025-26ஆம் ஆண்டில் உபரி வருவாய்க்கு இருக்கும் என்றும் கூறியிருந்தார். இதைக் குறிப்பிட்டே சாட்டை துரைமுருகன் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications