Flash Back:மோடி, அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் சர்ச்சை- 75 வயதில் கைதாகி சிறைக்கு போன நெல்லை கண்ணன்!
சென்னை: மறைந்த தமிழறிஞர் நெல்லை கண்ணன் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்காக 75 வயதில் புத்தாண்டு நாளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நெல்லை கண்ணன்.
Recommended Video
தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நெல்லை கண்ணன் ஆன்மீகவாதியாக இருந்தாலும் இறுதிவரை இந்துத்துவா, பாஜக எதிர்ப்பாளராகவே இருந்தார். அதுவும் மரணத்துக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் 75 வயதில் மோடி, அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர் நெல்லை கண்ணன்.

2019-ம் ஆண்டு காலத்தின் இறுதியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் பெரும் கிளர்ச்சிகள் நடைபெற்றன. தமிழகத்தின் நெல்லையில் டிசம்பர் 29-ந் தேதி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஒரு கூட்டம் நடைபெற்றம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் , நெல்லை கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நெல்லை கண்னன் பேசுகையில், நான் ஒரு இந்து அல்ல. நான் ஒரு தமிழ் சைவன்; சபரிமலை ஐயப்பன் கோவிலில் முசுலீமான வாஃபர்தான் ஐயப்பனுக்குத் தளபதி. மோடி ஒரு முட்டாள். ஒன்னும் தெரியாது,. இந்த அமித்ஷா தான் அபாயகரமான ஆள். ஒரு ஊடகம் விடாம எல்லாத்தையும் மிரட்டி வச்சிருக்கான். அமித்ஷாவுக்கு சோலி முடிஞ்சதுன்னா மோடிக்கு ஒன்னும் தெரியாது; அவன் சோலியும் முடிஞ்சிடும். நீங்க முடிச்சிருவீங்கன்னு நினைச்சேன் ! அது நடக்கல என்றார்.
நெல்லை கண்னனின் இந்தப் பேச்சால் இந்துத்துவா அமைப்பினர், பாஜகவினர் பெரும் கொந்தளிப்புக்குள்ளாகினர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நெல்லை கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது. நெல்லை கண்ணனை எந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என இந்துக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.
நெல்லை கண்ணன் மீது போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர். நெல்லை கண்னனின் நெல்லை வீடு முன்பாகவும் போராட்டம் நடத்தினர். நெல்லை கண்னனுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ல் நெல்லை கண்ணன் தமது 75வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications