சொட்ட சொட்ட நனைந்த சென்னை! ஒரே இரவில் புரட்டி போட்ட கனமழை! பெங்களூருக்கு யூடர்ன் போட்ட விமானங்கள்!
சென்னை : சென்னையில் இன்று இரவு பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமானதோடு துபாய் பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
தமிழகத்தின் பிற பகுதிகளான திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் மட்டும் வழக்கமாக கடும் வெயில் கொளுத்தியது.

சென்னை வானிலை
குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக மே மாதத்தில் இருப்பது போல வெயில் அதிக அளவில் இருந்த நிலையில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் இரவு நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் தூக்கம் இன்றி தவித்தனர் . இன்றும் வழக்கம்போல் சென்னையில் நண்பகலை கடும் வெயில் கொளுத்தியது.

வெளுத்து வாங்கிய கனமழை
இந்நிலையில் மாலை நேரத்தில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு சென்னை நகரின் பல பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 7 மணிக்கு மேல் திடீரென சென்னை வானிலை பெரும் மாற்றம் ஏற்பட்டு இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கிரீன்வேஸ் சாலை, கேகே நகர், அசோக் பில்லர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான காசிமேடு ராயபுரம் பூந்தமல்லி போரூர் வேலப்பன்சாவடி மாங்காடு மவுலிவாக்கம் குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை வெளுத்து வாங்கியது.

குளிர்ச்சியான காலநிலை
இதனால் நகரின் பல பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வரும் நிலையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இரவு எட்டு மணி முதல் 10:00 மணி வரை சென்னை நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அண்ணா சாலை, மெரினா கடற்கரைச் சாலை, ராயபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

விமான சேவை பாதிப்பு
இதனிடையே கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக இருக்கும் நிலையில் துபாய் பக்ரைன் லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இன்று சென்னை தினம் என்பதால் கன மழை பெய்தாலும் மகிழ்ச்சியே என்கின்றனர் சென்னைவாசிகள்.












Click it and Unblock the Notifications