பிரிச்சிபோடுங்க.. ரேஷனில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு தனித்தனி ரசீது.. தமிழக அரசு அதிரடி-ஏன்?
சென்னை: ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியை தனித்தனியாக பிரித்து ரசீது போட்டு வழங்க வேண்டும் என தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை புத்தாண்டு தினமான நாளை முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்களில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு உள்ளது.
பொது வினியோக திட்டத்தின் கீழ் இந்த பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தனித்தனி ரசீது வழங்க உத்தரவு
அதன்படி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக பில் அச்சடித்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை என்பது புத்தாண்டு தினமான நாளை முதல் பின்பற்றப்பட வேண்டும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவில் இருப்பது என்ன?
இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் உள்ள முக்கிய விஷயங்கள் வருமாறு: பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் PHH, AAY கார்டு தாரர்களுக்கு அத்திாவசிய பொரட்கள் வினியோகம் செய்யும்போது அரிசியினை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டாவது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக POS இயந்திரத்தில் இரண்டு ரசீது பதிவு செய்ய வேண்டும்.

பின்பற்றாவிட்டால் நடவடிக்கை
இந்த முறையினை பின்பற்றாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினால் அதற்குண்டான வேறுபாட்டு தொகையினை அரசிற்கு செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவு என்பது நேற்று துறை ஆணையர் தலைமையில் நடந்த கூகுள் மீட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பாது சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
தற்போது வழங்கப்படும் அரிசிக்கு ஒரே ரசீது கொடுக்கப்பட்டு வருவதால் மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருட்கள் சரியாக சென்றடைகிறதா என்பதில் குழப்பம் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த புதிய உத்தரவு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications