'கமல், விக்ரம், சூர்யா..' தொடர்ந்து குறிவைக்கப்படும் திரை பிரபலங்கள்.. அரசியலா? வெற்று விளம்பரமா?
சென்னை: கடந்த காலங்களிலும் கூட தமிழ் சினிமாவிலும் சரி, இந்திய சினிமாவிலும் சரி குறிப்பிட்ட சில கருத்துகளைக் கூறியதாலேயே பல திரைப்படங்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே படைப்பு சுதந்திரம் உள்ளதா என்பது குறித்த விவாதம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது
ஒருபுறம் ஜனநாயக நாட்டில் படைப்பு சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. அதேநேரம் மறுபுறம் படைப்பு சுதந்திரம் என்பது வரையறுக்கப்படாததாக இருக்கக் கூடாது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

கடந்த காலங்களில்
கடந்த காலங்களிலும் தமிழ் சினிமாவில் படைப்பு சுதந்திரம் vs அதற்கான வரையறைகள் குறித்த விவாதங்கள் இருந்துள்ளன. வாலியின் கதையில் ஜோதி பாண்டியன் இயக்கத்தில் உருவான ஒரே ஒரு கிராமத்திலேயே திரைப்படத்தை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது. சாதி வாரியான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அத்திரைப்படம் பேசியிருந்ததால் தடை விதிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் தலையீட்டிற்குப் பின்னரே படம் வெளியானது.

த டா வின்சி கோட்
த டா வின்சி கோட் திரைப்படமும் குறிப்பிட்ட கிருத்துவ நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி தமிழ்நாட்டில் அப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், அதுவும் நீதிமன்ற தலையீட்டிற்குப் பின்னரே திரையிட அனுமதிக்கப்பட்டது. அதேபோல கமலின் விஸ்வரூபம்திரைப்படமும் ரிலீஸ் சமயத்தில் என்ன பாடுபட்டது என அனைவருக்கும் தெரியும்.

பாலிவுட்டிலும் தொடரும் சிக்கல்
தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்தியாவிலும் கூட இப்படிப் பல படங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நடிகர் அமீர் கான் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான பிகே திரைப்படம் வெளியான போது பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் படத்தில் இருக்கும் சில காட்சிகள் தங்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர். அதேபோல 2018 தீபிகா படுகோன் நடிப்பில் பத்மாவதி படம் வெளியான போதிலும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. சில மாநிலங்களில் இப்படத்திற்குத் தடையும் விதிக்கப்பட்டன. இருப்பினும், அனைத்தையும் தாண்டி இரண்டு படங்களும் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றன.

சண்டியர் டூ விருமாண்டி
படத்தின் கதையை விட்டுவிடுங்கள். பெயர்களுக்காகக் கூட சில திரைப்படங்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இதிலும் கமல் படம் சிக்கியுள்ளது. கமல் நடித்த விருமாண்டி திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் சண்டியர். இருப்பினும், புதிய தமிழகம் சார்பில் இந்தப் பெயரை வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டது. இதன் பின்னரே படத்தின் பெயர் விருமாண்டி என மாற்றப்பட்டது.

விக்ரம் திரைப்படம்
அவ்வளவு கூட பின்னால் செல்ல வேண்டாம். விக்ரம், அனுஷ்கா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள். விக்ராமின் நடிப்பிற்காகவே இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் தெய்வமகன். சிவாஜி கணேசனின் படமான தெய்வமகன் படத்தின் தலைப்பை விக்ரம் படத்திற்கு வைக்க நடிகர் பிரபு அதிருப்தி தெரிவிக்கவே, படத்தின் தலைப்பை தெய்வத்திருமகன் என்று மாற்றினர்.

பிரச்சினை தீர்ந்தபாடில்லை
இருப்பினும், அந்த பெயருக்கு எதிராகவும் முக்குலத்தோர் போராட்டம் நடத்தினர். மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று புகாரும் அளித்தார். இதையடுத்து படத்தின் பெயர் தெய்வத்திருமகள் என்று மாற்றப்பட்டது. இப்படி வெறும் தலைப்பிற்காகவே பல பிரச்சினைகளை சந்தித்தவர்களும் உள்ளனர். இப்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ளது என்றாலும் கூட, அது முற்றிலுமாக தீர்ந்தபாடில்லை.

800 திரைப்படம்
விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இருப்பினும், பல லட்சம் தமிழர்களைக் கொன்று இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசுக்குத் தொடர்ந்து ஆதரவாக இருந்து வரும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்ற பலரும் வலியுறுத்தினர். இந்த வலியுறுத்தல் ஒரு கட்டத்தில் மிரட்டலாகவும் மாறியது. பாரதிராஜா உள்ளிட்ட பல இயக்குநர்களும் விஜய் சேதுபதி அத்திரைப்படத்தில் நடிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். சர்ச்சை வலுப்பெறவே படத்தில் இருந்து அவர் விலகினார்.

ஜெய் பீம் படம்
இப்போது ஜெய் பீம் திரைப்படமும் மீண்டும் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. முதலில் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் குற்றம் செய்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் உள்ள காலெண்டரில் வன்னியர் சாதியைக் குறிப்பிடும் வகையில் அக்னி கலசம் இருந்தது சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து அந்த காலெண்டரில் இருந்த படம் மாற்றப்பட்டது. அடுத்து வில்லன் கதாபாத்திரத்திற்கு ஜெ குரு என்று வேண்டுமென்றே பெயரை வைத்துள்ளதாகவும் வன்னியர் சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டு பொய்யான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டன.

அதிகரிக்கும் சர்ச்சை
இது விமர்சனங்களுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. நடிகர் சூர்யாவை அடித்தால் பரிசு, உதைத்தால் பரிசு என்று சிலர் அறிவித்து பதற்றத்தை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்தச் சர்ச்சை தொடர்ந்து பெரிதாகி வரும் நிலையில், ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், புலனாய்வுத் துறை அறிக்கையின்படி நடிகர் சூர்யாவின் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

என்ன தான் தீர்வு
சில படங்கள் உண்மையாகவே வன்முறையை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும் பல படங்கள் அரசியலுக்காகவே சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகின்றன. திரைப்படங்களில் எது குறித்துப் பேசலாம் எது சர்ச்சைக்குரியவை என்பதை வரையறுப்பதில் குழப்பமே நீடிப்பதே இதுபோன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். இதை ஆங்கிலத்தில் Grey area என்று கூறுவார்கள். ஒரு தரப்பினர் தங்கள் படங்களில் கூறும் கருத்துகளை அனுமதிக்கும் சமூகம், மற்றொரு தரப்பு தனது கருத்துகளைப் பேசும் போது அதைக் குற்றமாகப் பார்க்கிறது. அந்த நிலை மாற வேண்டும் என்பதைப் படைப்பாளிகளின் ஒற்றை கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications