தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை - தமிழகத்தில் 34 மாவட்டங்களில் சதமடித்தது
தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 50 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்திலும் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 50 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. அதே போல இன்று டீசல் விலை 23 காசுகள் அதிகரித்துள்ளது.

அதிரடி விலை உயர்வு
கடந்த 25 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையைத் தவிர 22 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. ஸ்பீடு பெட்ரோல் 104 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.

சதமடித்த பெட்ரோல் விலை
அரியலூர்-100.13, கோவை-102.83, கடலூர்-101.43, தர்மபுரி-100.68, திண்டுக்கல்-100.39, ஈரோடு-100.08, கள்ளக்குறிச்சி 101.44, காஞ்சிபுரம்-100.21, கன்னியாகுமரி-100.13, கரூர்-100.07, கிருஷ்ணகிரி-100, மதுரை-100.06, நாகப்பட்டினம்-100.22, நாமக்கல்-100.20, நீலகிரி-101.47, பெரம்பலூர்-100.04, புதுக்கோட்டை-100.04, ராமநாதபுரம்-100.08, ராணிப்பேட்டை-100.50,சேலம்-100.33, சிவகங்கை-100.59, தென்காசி-100.20, தஞ்சாவூர்-100, தேனி-100.64, திருப்பத்தூர்-101.46, திருவண்ணாமலை- 100.80, திருவாரூர்-100, தூத்துக்குடி-100.22, திருப்பூர்-100.09, வேலூர்-100.37, விழுப்புரம்-101.05, விருதுநகர்-100.84, மயிலாடுதுறை-100, செங்கல்பட்டு-100 ஆக விற்பனையாகிறது.

டீசல் விலையும் உச்சம்
பெட்ரோல் விலையுடன் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் பல்வேறு மாவட்டங்களில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.95 அளவுக்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக லாரி, ஆட்டோ, வாடகை கார் கட்டணங்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 49 காசுகள் ஆகவும், டீசல் லிட்டர் 93 ரூபாய் 46 காசுகள் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எப்போது விலை குறையும்
கொரோனா லாக்டவுன் காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications