கஜா: அரசின் நடவடிக்கையால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.. தமிழக முதல்வர் பேட்டி!
கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. கஜா புயல் கரையை கடந்ததை அடுத்து தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருகிறது.கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிகவும் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். தமிழக அமைச்சர்கள் எல்லோரும் இரவு பகல் பாராது சேவையில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து கஜா புயல் பாதிப்பு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்தார்.
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
அவர் தனது பேட்டியில், நாகை மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 82,000 பேர் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேதம் குறித்த ஆய்வுப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.
எவ்வளவு இழப்பீடு
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதுவரை கஜா புயலுக்கு 11 பேர் இறந்துள்ளதாக கலெக்டர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் , சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
விரைவில் இயல்பு
அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து பணியாற்றியுள்ளனர்.மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் 3 நாட்களுக்கு முன்பே மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புயல் பாதித்த பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்பும். போர்க்கால அடிப்படையில் பாதிப்புகள் சரி செய்யப்படும்.
மத்திய அரசு
நேரில் போய்ப் பார்வையிட்ட பிறகுதான் உண்மையான சேத விவரம் தெரிய வரும். முழுமையான விவரம் கிடைத்ததும் மத்திய அரசின் உதவி கோரப்படும். அமைச்சர் உதயக்குமார் இரவு பகலாக செயலாற்றினார்.புயல் அடங்கியதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவேன், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.