“வார் ரூம்” அறிவுரை.. “அண்ணாமலையின் அவதூறு!” கட்சியிலிருந்து நீக்கியது ஏன்? காயத்ரி ரகுராம் கேள்வி
விமர்சனங்களை கடந்து செல்லுமாறு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கும் நிலையில், அண்மையில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: தன் மீது முன் வைக்கப்படும் விமர்சனங்கள் அவதூறுகளுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பகிரங்கமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் என்று தெரிவித்த அண்ணாமலை, சிலரின் கருத்துக்களை கடந்து செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கும் நிலையில், அண்மையில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் அது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவினருக்கு எழுதிய கடிதத்தில், "கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள்! பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான உரம்.
ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அவதூறுகளை ஒதுக்கி தள்ளுங்கள். சமீப காலமாக என் மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதிரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக அறிகிறேன்.
'மாஸ் தலைவர்' போட்டியிட தயாராக இல்லை.. அண்ணாமலையை மீண்டும் சாடிய காயத்ரி ரகுராம்!
கடந்து போங்க
கட்சியின் தொண்டர்களும் தன்னார்வலர்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு பதில் அளிக்க தெரியாது என்பது பொருள் அல்ல. சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில் அளிப்பதை காட்டிலும் கடந்து செல்வதே ஆக சிறந்தது.
கட்சி வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்
மக்கள் பணியில் நாட்டம் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் நீங்கள், நமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கோ, எதிர்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கோ அல்லது சில பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கோ செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள்.
விஷமத்தன கருத்து
விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி உங்கள் கவனத்தை சிதறடிப்பது தான் சமூக வலைதள பரப்புரையாளர்களின் முழு நேர வேலை. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். நமது கருத்தில் ஆழம் உள்ளபோது அவதூறுகளுக்கு அவசியம் ஏற்படாது. என் மேல் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
செயல்பாடுகளால் எரிச்சல்
சில பத்திரிகைகள் என்னை பற்றி அவதூறு பரப்பினால்தான் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயந்தால், என்னுடைய கிராமத்தில் நான் ஒடுங்கி கிடக்க வேண்டியது தான். அதை தான் அவர்களும் விரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நமது செயல்பாடுகள் அவதூறு பரப்புவோருக்கு எரிச்சல் தருமேயானால், நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதையே அது வெளிக்காட்டுகிறது.
பகிரங்கமாக கருத்தை சொல்லுங்கள்
உங்கள் கருத்தை முன்வைக்க தயங்காதீர், பகிரங்கமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்! அதே சமயம், அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாக கொண்டு இயங்கி வரும் சிலருக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள். நாளை நமதே!" என்று அறிவுறுத்தி உள்ளார்.
காயத்ரி ரகுராம் விமர்சனம்
இந்த நிலையில் அண்ணாமலையின் கடிதத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா??? நீங்கள் தாக்கலாம் ஆனால் கவனமாக தாக்கலாம் என்பது உங்கள் வார்ரூம் அணிக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை. இது ஆரம்பத்திலிருந்தே எதையும் தாக்குவதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள் என்பதை ஏற்றுக்கொள்வது போன்றது.
ஏன் கட்சியிலிருந்து நீக்கினீர்கள்?
ஒரு கூட்டத்தில் 150 பேர் முன்னிலையில் நீங்கள் என்னைப் பற்றி பொய்யான செய்திகளைப் பரப்ப செய்தீர்கள் இதைத்தான் இப்போது வார்ரூம் என்னைத் தாக்க அதே காரணத்தை எடுத்துக்கொள்கிறது. கூட்டத்தில் என்னைப் பற்றி நீங்கள் வதந்திகளைப் பரப்பினீர்கள் என்றால் நான் கட்சியில் வளர்ந்து வருகிறேன் என்று அர்த்தம். இதே தானாக என் செயல்பாடுகள் உங்களுக்கு எரிச்சலை கொடுத்து இருந்ததால தானாக நான் ராஜினாமா செய்தேன் என்று சொன்னதும் அவசரமாக என்னை கட்சியில் இருந்து நீக்குனீங்க?" என்று குறிப்பிட்டு உள்ளார்.