பிரச்சனை வரும் முன்பே உஷாரான தமிழக அரசு..சென்னை, கோவை போல்..மற்ற பகுதிகளுக்கும் வருகிறது கட்டுப்பாடு
சென்னை : கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் பாதிக்கும் முன்பே இந்த முறை உஷாரான தமிழக அரசு, கொரோனாவின் தொற்று எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் கூட்டம் அதிகம் கூடும் வணிக பகுதிகளை மொத்தமாக மூட உத்தரவிட்டது.
இதன் காரணமாக சென்னையில் கடைகள் மூடப்பட்டன. கோவையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளிலும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் கொரோனா பரவல் பெரிய அளவில் உச்சம் பெறவில்லை. கட்டுக்குள் தான் இருக்கிறது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருவதால், கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது தமிழக அரசு. கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. எல்லையில் சோதனையை தீவிரமாக்கியும் வருகிறது.
3வது அலை
எனினும் முக்கிய நகரங்களான சென்னை, கோவையில் கொரோனா தொற்று உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. முதல் அலையில் கோயம்பேடு சந்தையில் பரவிய தொற்றுதான் மொத்த தமிழநாட்டையும் பெரிய அளவில் பீதிக்குள்ளாக்கியது. எனவே அதுபோன்று 3வது அலையில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது அரசு உறுதியாக உள்ளது. அதன்வெளிப்பாடாகவே கூட்டம் அதிகம் கூடிய சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள கடைகளை உடனடியாக அடைக்க அரசு உத்தரவிட்டது. சென்னையில் உள்ள திநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்பட சென்னையின் முககிய பகுதிகளில் உள்ள அனைத்து வணிக தலங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள்
இதேபோல் கோவை மாவட்டத்தில் நேற்று முதல் (ஆகஸ்ட் 3) முதல் காய்கறி, மளிகைக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.. மீன, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்கள் பாா்வைக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முககவசம், சமூக இடைவெளி ஆகிய விஷயங்களில் இப்போதே அரசு அதிகாரிகள் கடுமை காட்டத்தொடங்கி உள்ளனர்.
மாஸ்க் அதிகரிப்பு
சென்னை, கோவை மட்டுமல்ல, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலுமே சோதனைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன. மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து அவர்களே மாஸ்க் போடத்தொடங்கி உள்ளனர். கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் கடைகளுக்கு அபராதம் விதிப்பது, மக்களை எச்சரிப்பது, தடுப்பூசியை தீவிரமாக்குவது என மிகவும் தீவிரமாக இறங்கி உள்ளது அரசு இயந்திரம். சென்னை, கோவையில் மட்டும் கொரோனா அதிகரித்து உள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் அதிகரிக்கும் நிலை வந்தால் அங்கும் கட்டுப்பாடுகள் போடப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கொரோனா நிலவரம்
தற்போதைய நிலையில் தமிழகத்தில் செவ்வாய்கிழமை நிலவரப்படி புதிதாக மேலும் 1908 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்கிழமை மட்டும் 1,45,585 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 25,65,452 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25,11,076 பேர் குணமடைந்துள்ளனர். 34,159 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.