அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் அவலம்.. அமைச்சர் என்ன செய்கிறார்?- அண்ணாமலை தாக்கு!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சாடியுள்ளார் அண்ணாமலை.
சென்னை : நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். தனது துறை நாட்டின் எதிர்காலத்துக்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி அருகே மாணவர்களைக் கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசு பள்ளிகள், அவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன எனச் சாடியுள்ளார் அண்ணாமலை.
பெயர் மாறினாலும்.. போட்டோ இல்லை.. மோடி, அண்ணாமலை எங்கே? எடப்பாடியின் முடிவிற்கு இப்படி ஒரு காரணமா?
அரசுப் பள்ளியில் அவலம்?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சக்கம்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்கள் கழிப்பறையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து கழிப்பறையை சுத்தம் செய்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, இந்த அவலத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், அந்தப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளார்.
தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் அமைச்சர்
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிதிலமடைந்து கிடக்கும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தொடர்ச்சியாக அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் எதிர்காலத் தூண்களான பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.
நடவடிக்கை இல்லை
ஆண்டிப்பட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்த அவலம் நடந்திருக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும், இது போல அரசுப் பள்ளி மாணவர்களை, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஆனால், அரசு இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எந்த வித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், அவர்களை மேலும் அவல நிலையில் தள்ளுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன. தமிழகத்தில் பல தலைவர்களும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும், அரசுப் பள்ளியில் படித்து முன்னேறியவர்கள் என்பதை திறனற்ற திமுக அரசு ஞாபகத்தில் கொள்ள வேண்டும். உடனடியாக அரசு தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது துறை நாட்டின் எதிர்காலத்துக்கு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.