காசி - தமிழ் சங்கமம்.. தமிழ்நாட்டிலிருந்து இன்று உபி செல்லும் முதல் குழு! அனுப்பி வைக்கிறார் ஆளுநர்
சென்னை: வரும் 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து ரயிலில் செல்லும் முதல் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டை மத்திய அரசு அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
காசிக்கும் தமிழுக்கும் இருக்கும் பழமையான நாகரீக தொடர்பை உணர்த்தும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

என்ன சிறப்பு?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து நடத்தும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இந்த சங்கமம் நிகழ்ச்சியில் நாட்டின் கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை மற்றும் கல்வி சார்ந்த உரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இன்று முதல் குழு
இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களில் 2,592 பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு ரயில் மூலம் முதல் குழு செல்ல இருக்கிறது.

216 பேர்
முதல் நாள் வாரணாசிக்கு ரயிலில் செல்லும் குழுவில் 216 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்களில் 103 பேர் திருச்சியில் இருந்தும், 78 பேர் சென்னையில் இருந்தும், 35 பேர் ராமேஸ்வரத்தில் இருந்தும் வாரணாசிக்கு காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக செல்கின்றனர்.

ஆளுநர் ரவி
காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இக்குழுவினருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடி கொடியசைத்து அவர்களை அனுப்பி வைக்கிறார். மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகனும் அந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்.

பிரதமர் மோடி
இந்த நிலையில் வரும் 19 ஆம் தேதி வாரணாசி மக்களவைத் தொகுதி உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்த நிகழ்வின் அமைப்பாளராக பாரதிய பாஷா சமிதி தலைவர் பத்மஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரி நியமிக்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications