வேலை கொடுத்து விட்டு நீக்கம்.. ரூ. 10 லட்சம் இழப்பீடு தர கலெக்டருக்கு உத்தரவு
சென்னை: சத்துணவு அமைப்பாளராக பணிநியமனம் செய்து விட்டு, பின், அப்பதவி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது எனக் கூறி, பணியில் சேர அனுமதி மறுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007 ம் ஆண்டு ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு மேல் நிலைப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக நியமன உத்தரவு பெற்ற வரியான்காவல் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டாள் என்பவர், பணியில் சேரச் சென்ற போது, அந்த பெண்ணிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டது எனக் கூறி, பணியில் சேர அனுமதி மறுத்துள்ளார் வட்டார வளர்ச்சி அதிகாரி.
இதையடுத்து, தனக்கு பிறப்பிக்கப்பட்ட பணி நியமன ஆணையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, 2007 ம் ஆண்டு ஆண்டாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, மாவட்டத்தை நிர்வகிக்கும் மாவட்ட ஆட்சியர், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக கண்டனம் தெரிவித்தார்.
சோளிங்கர் ஏரிக்கு நடுவில் கிணறு தோண்ட திட்டம்.. டெண்டரை ரத்து செய்தது ஹைகோர்ட்
மேலும், பணி நியமனம் செய்யப்பட்ட 2007 ல் 34 வயதில் இருந்த மனுதாரர், தற்போது பணிநியமனம் பெறும் வயதை தாண்டி விட்டதால், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர்களும், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவின்படி, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதை அரியலூர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.