தலையில்லாமல் எரிந்த உடல்! ஏரியா பிரிப்பதில் போலீசாருக்குள் தகராறு! சடலம் முன் சண்டை போட்ட வினோதம்!
சென்னை : சென்னை திருவேற்காடு அருகே தலையில்லாமல் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இடையே எல்லை பிரச்சினையால் உடலை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த மேட்டுப்பாளையம் பாரிவாக்கம் செல்லும் சாலை அருகே உள்ள குப்பைமேட்டில் தலையில்லாமல் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்து அவ்வழியாக சென்ற மக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு தெரிந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரத்திலேயே கூட்டம் கூட தொடங்கியது.

சென்னையில் அதிர்ச்சி
இந்நிலையில் கொலை குறித்து தகவல் அறிந்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு உள்ளிட்ட காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இச்சம்பவம் நடந்த இடம் எந்த காவல் நிலையத்தின் எல்லைக்குள் வருகிறது என்கிற குழப்பம் ஏற்பட்டது.

போலீசாருக்கிடையே குழப்பம்
ஒவ்வொரு காவல்நிலைய போலீசாரும் இது தங்கள் காவல்நிலைய எல்லைக்கு வராது எனவும், நீங்கள் உடலை எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் என அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தனர். இதனால் எரிந்த உடல் நீண்ட நேரமாக அங்கேயே கிடந்தது. இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசாரிடையே நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஒரு வழியாக திருவேற்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பது தெரியவந்தது.

கொலை குறித்து விசாரணை
இதனையடுத்து உடலை மீட்டு உடற்கூறு கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. தொடர்ந்து தலையில்லாமல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட நபர் யார் என்பது இதுவரை தெரியவில்லை.

மக்கள் கோரிக்கை
எதற்காக இந்த கொலை நடந்தது என்றும் ஏதேனும் முன்பகை காரணமாக கொலை நடந்ததா என்றும் பல்வேறு கோணங்களில் திருவேற்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் திருட்டு,கொள்ளை என அனேக அசம்பாவிதங்கள் ஏற்படுவதால் காவல்துறையினர் இரவு நேரங்களில் இப்பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.