2ஆவது அலை வீசியும் அசட்டை செய்யும் மக்கள்.. காசிமேடு, வானகரத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்
சென்னை: இரண்டாம் கட்ட கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள் சமூக இடைவெளியில்லாமல் ஒரே இடத்தில் குவிந்ததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் பிரியர்கள் அதிகாலை முதலே மீன்களை வாங்க குவிந்தனர். கொரோனாவின் முதல் அலை பரவியபோது பொதுமக்கள் அதிகளவில் கூடி நோய் தொற்று அதிகமாக பரவியதால் மீன்பிடி சந்தை மூடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட நோய்த்தொற்று பரவல் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் ஒரு சில நபர்கள் முக கவசங்கள் அணியாமல் மீன்களை வாங்க காசிமேடு மீன்பிடி சந்தையில் குவிந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

அறிவுரை
மீன் பிரியர்கள் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டிய நிலையில் போலீஸார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையிலும் நோய்த்தொற்று பரவலை மறந்து சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 645 தாண்டி உள்ளது.

சமூக ஆர்வலர்கள்
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் என்ற நிலையில் பொதுமக்கள் நோய் தொற்றிலிருந்து தங்களை தாங்களாகவே தற்காத்துக் கொள்ளாமல் இதுபோன்று சந்தை பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கூடுவது நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் கூட்டம்
அது போல் வானகரம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியுள்ளது. சென்னையை அடுத்த வானகரம் மீன் மார்க்கெட் பிரபலமானது. அண்ணாநகர், முகப்பேர், பூந்தமல்லி, மதுரவாயலில் உள்ளவர்கள் மீன் வாங்க இங்கு வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க காலை முதலே மக்கள் கூட்டம் நிறைந்துகாணப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள்
மேலும் சமூக இடைவெளியின்றியும் ஒருசிலர் முககவசம் அணியாமலும் உள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நோய் தொற்று பரவலைத் தடுக்க மக்கள் இந்த மார்கெட்டில் கூடுவதைத் தவிர்க்க தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications