இன்னும் மீளவே இல்லை.. அதற்குள் அடுத்த அடியா.. டெல்டா மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டு மெல்ல, மெல்ல மீண்டு வரும் டெல்டா மாவட்டங்களில் மற்றொரு பிரச்சனை காத்திருக்கிறது.
வங்க கடலில் உருவான கஜா புயல், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்று மற்றும் மழை காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
விவசாயிகளின் வாழ்வாதாரமான மரங்களும், பயிர்களும் நாசம் அடைந்து விட்டதால் அவர்கள் கண்ணீரில் தத்தளிக்கிறார்கள்.
சுத்தமாக எதுவுமே இல்லை.. என்ன செய்வது என்றே தெரியலை.. டெல்டா மக்களின் வேதனை!
மின் வினியோகம்
பல பகுதிகளிலும், மின்வினியோகம், தொலைதொடர்பு விநியோகம் இன்னும் சீரடையவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு, நாகை மாவட்டத்தில் நகர்ப் பகுதிகளில் மட்டும் இன்று மதியத்திற்கு மேல் மின்சார இணைப்பு கிடைத்துள்ளது. அம்மாவட்டத்தின் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்னும் மின் வினியோகம் சீரடையவில்லை.
புதிய காற்றழுத்த தாழ்வு
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மாநில கடலோர பகுதிகளில் அதிலும் குறிப்பாக, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார்.
சிரமம்
புதுச்சேரியிலும் இந்த மழை பாதிப்பு எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. மழை பெய்ய தொடங்கினால், மின்விநியோக சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவற்றை விரைந்து சீர்படுத்துவதில் சிரமம் ஏற்படும்.
மழையால் தாமதமாகும்
மழை பெய்து கொண்டிருக்கும்போது, மின் வினியோகத்தை சீரமைப்பதும் ஆபத்தில் கொண்டு முடியும் என்பதால், பணிகள் தாமதமாகும். எனவே டெல்டா மக்களுக்கு இடர்ப்பாடு காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கூடிய விரைவில், இன்று இரவுக்குள்ளாக, மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்துவிட வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை.