8 மணி நேர கனமழை.. போக்குவரத்து நெரிசல்.. நடுவழியில் நிற்கும் ஆம்புலன்ஸ்கள்..மொத்தமாக முடங்கிய சென்னை
சென்னை: சென்னையில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழையின் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் இன்று 8 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
Recommended Video
கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம், என பல்வேறு நகர்ப்புற பகுதியிலும், ஆவடி, அம்பத்தூர் என புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டி வருகிறது.

மீண்டும் வெள்ளக்காடான சென்னை
இதனால் சென்னையின் பல இடங்களில் பிரதான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் வீடுகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. கூவம் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னை நகர்புற பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.

போக்குவரத்து நெரிசல்
வெள்ளநீர் தேங்கியதால் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை மற்றும் ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கிண்டி, வடபழனி, எழும்பூர், ஆயிரம் விளக்குமயிலாப்பூர் ஆர்கே சாலை ராயப்பேட்டை என சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்கள் பரிதவிப்பு
1 கிலோ மீட்டரைக்கடக்க 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பணி முடிந்து இல்லம் திரும்புவோர் கடும் அவதி அடைந்துள்ளனர். மாநகர பேருந்து ஊர்ந்தபடியே செல்கின்றன. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றன. சில இடங்களில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் நகராமல் அப்படியே அணிவகுத்து நிற்கின்றன.

பணிகள் தீவிரம்
போலீசார், போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாநகர ஆணையர் சுகன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார். சுரங்கபாதை மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications