திடீரென இடியுடன் பெய்த கனமழை.. குளுகுளுவான தலைநகர் சென்னை.. மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னையின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெயில் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் புதன்கிழமை 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
குறிப்பாக தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி இருந்தது.
அதேபோல் அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் காலை முதல் வெயில் குறைந்த அளவே காணப்பட்டது.
15 மாவட்டங்களில் இன்று கனமழை! வானிலை மையம் தந்த 'குட் நியூஸ்'! உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!
இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர், சூளைமேடு, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, எம்எம்டிஏ காலனி, செங்குன்றம், முகப்பேர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் அண்ணாநகர், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இதனால் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே மழை தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சென்னை மழை நீர் வடிகால் பணிகள், கழிவு நீர் செல்வதற்காக பணிகள் தமிழக அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இம்முறை சென்னையில் பருவ மழையின் போது மழைநீர் தேங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.