அலைகடலென திரண்டு வாரீர்.. என்ன ஒருத்தரையும் காணோம்.. அர்ஜுன் சம்பத் நிலையை பாருங்க.. ரோட்டில் கார்
சென்னை: கனடாவில் இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 பேர் மட்டுமே வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இந்த விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியிருந்தது. இந்த நிலையில் கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோயிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இதை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக கண்டித்திருந்தார். இந்த நிலையில் இந்துக் கோயில்களை தாக்கிய பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் வருவோர் என எதிர்பார்க்கப்பட்டதால் உதவி ஆணையர் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
ஆனால் இன்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுன் சம்பத் உள்பட 11 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து அர்ஜுன் சம்பத், அவருடைய ஓட்டுநர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அவருடைய கார் சாலையில் கேட்பாரற்று இருந்தது. பின்னர் போலீஸார் அந்த காரை ஓரமாக நிறுத்தினராம்.













Click it and Unblock the Notifications