சைட் ரெடி.. 12 கிராமங்களில் நிலம் எடுக்க முடிவு.. அசுர வேகத்தில் உருவாகிறது.. ஓசூர் விமான நிலையம்!
சென்னை: பெங்களூர் அருகில், அதிவேகமாக வளரும் தமிழ்நாட்டின் தொழில் நகரமான ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 800 ஏக்கர் அரசு நிலமும், 12 கிராமங்களுக்குச் சொந்தமான பிற நிலங்களும் அடங்கும்.
ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் இந்த பிரம்மாண்ட விமான அந்நிலையை திட்டத்திற்கு, ஓசூர்-பெரிகை-பாகலூர்-சூளகிரி பகுதி மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டது. விரிவான தொழில்நுட்ப-பொருளாதார அறிக்கை (DTER) தயாரிக்க ஆலோசகரைத் தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் வெளியிட்டதுடன், இடம் ஒப்புதலுக்காக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தையும் அணுகியுள்ளது.

ஓசூர் விமான நிலையம்
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் நில மேம்பாட்டுத் திட்டத்தின் (LDP) மதிப்பீட்டின்படி, விமான நிலையத்திற்கு அரசுக்குச் சொந்தமான 845 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படுகிறது.
விமான நிலைய திட்டத்திற்கு விவசாய நிலங்கள் உள்ளிட்ட 2,134 ஏக்கர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். மொத்தமாக, 2,979 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது, என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நிலம் கையகப்படுத்தப்படும் 12 கிராமங்களில் 10 ஓசூர் தாலுகாவிலும், மீதி சூளகிரி தாலுகாவிலும் அமைந்துள்ளன.
விமான நிலையம் அமைய வாய்ப்புள்ள கிராமங்கள்: பாலவனப்பள்ளி, முதலி, அதவனப்பள்ளி, தசப்பள்ளி, பெதமுதுலி, ஆத்தூர், ஆலநத்தம், காரப்பள்ளி, நந்திமங்கலம், சூடுகொண்டப்பள்ளி, மிடுகேப்பள்ளி மற்றும் வெங்கடேசபுரம் ஆகியவை.
நில நிர்வாக ஆணையரின் பார்வைக்கு அனுப்பப்பட்ட நில மேம்பாட்டுத் திட்டம் (LDP), அவரது கேள்விகளுக்குப் பதிலளிக்க கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. அவரிடமிருந்து விரைவில் பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம், அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
LDP அங்கீகரிக்கப்பட்டதும், நிர்வாக அனுமதிக்கு பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் ஒரு அரசாணை (GO) வெளியிடப்படும். "GO வெளியானதும், நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கும். பிப்ரவரிக்குள் முடிக்க நம்புகிறோம், ஆனால் ஒப்புதல்கள் விரைவாகக் கிடைப்பதைப் பொறுத்தது," என்று கூறப்படுகிறது.
பெரிகை-பாகலூர் ஓசூர் விமான நிலையம்
தேர்வு செய்யப்பட்ட பெரிகை-பாகலூர் பகுதி, பெங்களூர் சாட்டிலைட் நகர வெளிவட்ட சாலையின் (STRR) தமிழ்நாட்டுப் பிரிவுக்கு மிக அருகில் உள்ளது. ஓசூரில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 3,000 எம்.எஸ்.எம்.இ அலகுகள் இருப்பதால், புதிய விமான நிலையம் சரக்குப் போக்குவரத்தையும் ஈர்க்கும் என அரசு நம்புகிறது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு 150 கி.மீ. சுற்றளவில் 2033 வரை புதிய விமான நிலையம் அமைக்க முடியாது என்ற விதி உள்ளது. ஆனால், விலக்கு பெற்று அல்லது சலுகை ஒப்பந்தம் முடிந்த பிறகு திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்று மாநில அரசு நம்புகிறது.
மேலும், சலுகை ஒப்பந்தம் காரணமாக, இந்த விமான நிலையத் திட்டத்திற்கு பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திடமிருந்து (BIAL) தமிழக அரசு தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும்.
சுவாரஸ்யமாக, BIAL-ன் பெரும்பான்மைப் பங்குதாரரான ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ், ஓசூர் மற்றும் சென்னை விமான நிலையங்களில் ஆர்வம் காட்டியுள்ளது. நிறுவனத்தின் தலைவர் பிரேம் வாட்சா, கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இது குறித்துப் பேசினார். இதனால் அந்த நிறுவனமே ஓசூர் விமான நிலையத்தை நிர்வகிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.












Click it and Unblock the Notifications