பராசக்தி ஹீரோடா! கணேசமூர்த்தி “சிவாஜி”ஆன கதை.. பின்னணியில் பெரியார், அண்ணா - முதல்வர் ஸ்டாலின் பதிவு
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சிவாஜி என்ற பெயர் எப்படி வந்தது என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் நடிப்பு நாயகனான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் அமைந்து இருக்கும் மணிமண்டபத்திற்கு வெளியே நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வையில் தென்படும் வகையில் சிவாஜி சிலையை அமைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதன்படியே வெண்கல சிலை வெளியே அமைக்கப்பட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாள்.. புகைப்படத்திற்கு மலர்தூவி ஸ்டாலின் மரியாதை
முதலமைச்சர் மரியாதை
இந்த நிலையில் இன்று காலை சிவாஜி மணிமண்டபத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சென்றனர். அங்கு வெண்கல சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த சிவாஜியின் உருவபடத்திற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து மணிமண்டபத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினரிடம் பேசினார்.
நடிப்புக்கு இலக்கணம்
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, மணிமண்டபத்துக்குள் இருந்து வெளியே வைக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். நடிப்புக் கலைக்கு என்றும் இலக்கணமாகத் திகழுபவர் நடிகர் திலகம்!
பெரியார், அண்ணா
பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து, தந்தை பெரியாரால் 'சிவாஜி' என்ற பட்டம் பெற்று, அந்தப் பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர். பராசக்தி ஹீரோவாக புரட்சிக் கனல் கக்கி, வரலாற்று நாயகர்களின் திரை வடிவமாக நம் மனதில் பதிந்துள்ள நடிகர் திலகம் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரனைய நண்பர்.
பராசக்தி ஹீரோ
1952-இல் வெளியான அவரது முதல் திரைப்படமான பராசக்திக்கு இது 70-ஆம் ஆண்டு. முத்தமிழறிஞர் கலைஞரின் கூர்மிகு தமிழும் நடிகர் திலகத்தின் நடிப்பும் தமிழ்த் திரையுலகின் திருப்புமுனைகள்! கலை உள்ள வரை செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்!" என்றார்.