பிடிங்க, 20 சீட்தான்.. அதிமுக சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்ட பாஜக.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: 35 தொகுதிகள் வரை கேட்ட பாஜகவுக்கு, 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது அதிமுக.
லோக்சபா தேர்தல் முதல் நட்பில் இருக்கக்கூடிய தோழமைக் கட்சி.. மத்தியில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் கட்சி.. என இத்தனை இருந்தாலும், பாஜக கேட்டதை விட கிட்டத்தட்ட பாதி தொகுதிகளைத்தான் வழங்கியுள்ளது அதிமுக.
கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக பெரிதாக எதிர்பார்த்தது. ஆனால் கிடைத்தது 5 தொகுதிகள்தான்.
இரவோடு அறிவிப்பு
இந்த நிலையில் 20 தொகுதிகளுக்கு பாஜக எப்படி ஒப்புக் கொண்டது என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. முதலில்.. அவசரமாக நேற்று நள்ளிரவு நேரத்தில் தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாக காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம். கடந்த முறை அமித் ஷா, தமிழகம் வந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து இட ஒதுக்கீடு பற்றிய ஆலோசனை நடத்தியிருந்தார். ஆனால் முடிவு எட்டப்படவில்லை.
அமித் ஷா வருகை
இந்த நிலையில் நாளை 7ம் தேதி நாகர்கோவிலுக்கு அமித்ஷா வருகை தர உள்ளார். இதற்குள்ளாக கூட்டணியை இறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, கன்னியாகுமரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.. இந்த செய்திகள் வெளியான பிறகு அமித்ஷா பிரச்சாரம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது பாஜக எண்ணம். எனவேதான் நேற்று இரவோடு இரவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுக வலியுறுத்தல்படி 20 தொகுதிகளுக்கு பாஜக பணிந்துள்ளது.
விரும்பிய தொகுதிகள்தான் முக்கியம்
20 தொகுதிகளுக்கு பாஜக ஒப்புக்கொள்ள முக்கிய காரணம். அதில் 10 தொகுதிகள் தாங்கள் கேட்கக்கூடிய தொகுதிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தான். குறிப்பாக, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகளை பாஜக தனது லிஸ்டில் வைத்துள்ளது. கூடுதல் தொகுதிகள் வாங்கிவிட்டு, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் போட்டியிடுவதைவிட தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதும் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக, குறைந்த தொகுதிகளை வாங்கிக் கொள்வது நல்லது என முடிவுக்கு அந்த கட்சி வந்துள்ளது.
முக்கிய வேட்பாளர்கள்
பாஜக மனதில் வைத்துள்ள 10 தொகுதிகளில் தங்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்களை வேட்பாளராக களமிறக்க உள்ளது. அதில் கணிசமாக வெற்றி பெற்று விட்டால், தமிழக சட்டசபையில் கால் வைத்து விடலாம். அதுவே இப்போதைக்கு போதுமானது என்பது திட்டமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
கூட்டணியில் மகிழ்ச்சி
பாமகவை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் அந்த கட்சிக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் இல்லை. அதிமுக நிர்வாகிகளும், பாஜகவுக்கு குறைந்த சீட் கொடுக்கப்பட்டதால் அதிக தொகுதிகளில் இரட்டைஇலை களம் காண போகிறது என்று உற்சாகத்தோடு வேலை பார்ப்பவர்கள். பாட்டாளி மக்கள் கட்சியினரும் உற்சாகத்தோடு வேலை பார்ப்பார்கள். கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பை இருந்தால் பாதி வெற்றி கிடைத்துவிடும் என்று பாஜக நினைக்கிறது. எனவேதான் 20 தொகுதிகள் என்றாலும் இன்முகத்தோடு அவற்றை வாங்கிக்கொண்டு முக்கிய தொகுதிகளில் களம் இறங்க காத்துக்கொண்டிருக்கிறது பாஜக.