ஆன்லைன் செஸ்.. காலிறுதி போட்டியின் போது மின்தடை.. துரிதமாக செயல்பட்ட ஆனந்த்.. சுவாரசிய சம்பவம்!
சென்னை: சென்னையில் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும் மின்சாரம் காரணமாக, செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் போட்டி ஒன்றில் ஏறத்தாழ தோல்வி அடையும் நிலைக்கே சென்றுவிட்டாராம்.. இவர் சென்னை மின்சார நிறுத்தத்தை தாண்டி எப்படி அந்த போட்டியில் கலந்து கொண்டார், உண்மையில் என்ன நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது!
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக உலகம் முழுக்க விளையாட்டு போட்டிகள் நடக்காமல் முடங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் விளையாட வாய்ப்பு உள்ள போட்டிகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் ஆங்காங்கே செஸ் போட்டிகளும் நடந்து வருகிறது.
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சென்னையில் இருந்து ஆன்லைன் மூலம் நடந்த ஒலிம்பியாட் செஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறார். பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் இந்த சர்வதேச செஸ் போட்டியில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கத்தார்...அடிப்படை சம்பளம் நிர்ணயம்...பணி மாற்றம்...முன் அனுமதி தேவையில்லை!!
என்ன நடந்தது
கடந்த வாரம் இந்த செஸ் போட்டியின் காலிறுதி போட்டி நடந்துள்ளது. இந்தியாவிற்கும் அர்மேனியாவிற்கும் இந்த போட்டி நடந்துள்ளது. இதில்தான் சென்னையை சேர்ந்த வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறார். ஆனால் போட்டி நடந்த நாள் அன்று, காலை 9-5 சென்னையில் அடையார் கோட்டூர்புரம் பகுதியில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் தடை
விஸ்வநாதன் ஆனந்த் விளையாடிய செஸ் போட்டி ஆன்லைனில் விளையாட வேண்டிய போட்டி. இதற்கு கணினியில் கேமரா இணைத்து, அதிவேக இணைய வசதியுடன் போட்டியை நடத்த வேண்டும். லேப்டாப்பில், கணினியில் எப்போதும் சார்ஜ் இருக்க வேண்டும். மின்சாரம் இல்லாமல் இந்த போட்டியை விளையாடுவது மிக மிக கஷ்டம். சரியாக விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட வேண்டிய அதே நாளில் அவரின் ஏரியாவில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் எப்படி
இந்த போட்டி மின்சாரம் மூலம் தடைபட கூடாது என்பதில் விஸ்வநாதன் ஆனந்த் உறுதியாக இருந்துள்ளார். இதனால் இந்திய செஸ் அணியின் கேப்டன் ஸ்ரீநாத் நாராயணனிடம் மின்சாரம் துண்டிப்பு குறித்து விஸ்வநாதன் ஆனந்த் பேசியுள்ளார். இதையடுத்து ஸ்ரீநாத் தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் டேர்ஸ் அஹமது என்ற அதிகாரியிடம் பேசி இருக்கிறார். தற்போது லண்டனில் இருக்கும் இவர் உடனே, விஸ்வநாதன் ஆனந்த்திற்கு உதவ முன் வந்துள்ளார்.
தமிழ்நாடு அதிகாரி
ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் டேர்ஸ் அஹமது தமிழகத்தில் பணியாற்றியவர். இவர்தான் லண்டனில் இருந்து சென்னையில் இருந்து தனக்கு தெரிந்த மின்சார துறை அதிகாரிகளிடம் போனில் பேசி உள்ளார். இவர் பேசியதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த மின்சாரதுறை அதிகாரிகள், ஸ்ரீநாத்திடம் போனில் பேசி உள்ளனர். போட்டி எப்போது நடக்கிறது என்பது குறித்த விவரங்களை கேட்டு உள்ளனர்.
மின்சாரம் வந்தது
இதையடுத்து காலிறுதி போட்டியின் போது சரியாக போட்டி தொடங்கும் முன் மின்சாரம் வந்து இருக்கிறது. போட்டி முடியும் வரை இடைஞ்சல் இல்லாமல் மின்சாரம் வந்து இருக்கிறது. இதனால் அந்த போட்டியில் மின்சாரம் தடை இன்றி விஸ்வநாதன் ஆனந்த் விளையாடி இருக்கிறார். பொதுவாக செஸ் போட்டிகளில் ஒரு 10 நொடி தாமதம் ஆனால் கூட அதனால் புள்ளிகளை இழக்க நேரிடும். மின்சாரம் தடைபட்டு, இணையம் துண்டிக்கப்பட்டு, மீண்டும் இன்வெர்ட்டர் ஆன் ஆகி கனெக்ட் ஆகும் ஆவதற்குள் விஸ்வநாதன் ஆனந்த் நிறைய புள்ளிகளை இழக்க நேரிடும்.
இந்தியா தோல்வி
இது இந்திய அணியின் தோல்விக்கே கூட காரணமாக மாறும். இதனால் இன்வெர்ட்டரை நம்பி செஸ் விளையாட முடியாது. தொடர்ச்சியாக இடையூறு இன்றி மின்சாரம் இருந்தால் மட்டுமே போட்டி சரியாக நடக்கும். இந்த கோரிக்கையை மின்சார துறை அதிகாரிகள் ஏற்று சென்னையில் விஸ்வநாதன் ஆனந்த் இருக்கும் பகுதிக்கு அன்று தடையின்றி மின்சாரம் வழங்கி இருக்கிறார்கள். அன்று மின்சாரம் வாரியம் தொடங்கி ஐஏஎஸ் அதிகாரி டேர்ஸ் அஹமது வரை எல்லோரும் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு உதவி இருக்கிறார்கள்.
என்ன அனுபவம்
முன்னதாக மங்கோலியா அணிக்கும், இந்திய அணிக்கும் இதே தொடரில் போட்டி நடந்த போது இந்திய அணியின் போட்டி மின்சாரம் காரணமாக தடை ஏற்பட்டு, அதனால் இந்தியா புள்ளியை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை முன்கூட்டியே விஸ்வநாதன் ஆனந்த் திட்டமிட்டு செயல்பட்டு, போட்டியின் போது மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொண்டார்.. தமிழக மின்வாரியமும் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.