தண்டவாளம் மாறிய ரயில்! சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் மோதியது எப்படி? தெற்கு ரயில்வே விளக்கம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் தடம்புரண்டதில் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து தமிழகத்தை உலுக்கிய நிலையில் விபத்துக்கான காரணம் பற்றி தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்என் சிங் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12578) இயக்கப்பட்டு வருகிறது. இது வாராந்திர ரயிலாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மைசூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தர்பங்காவை சென்றடையும்.

இந்த ரயில் என்பது பெங்களூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூதூர் வழியாக தர்பாங்காவுக்கு செல்லும்.
வழக்கம்போல் நேற்று காலையில் மைசூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து கவரைப்பேட்டை ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
கவரைப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே திடீரென்று தண்டவாளத்தில் நின்ற சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. நின்ற சரக்கு ரயிலின் பின்பகுதியில் இந்த ரயில் பயங்கரமாக மோதியது. சுமார் 75 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் மோதிய நிலையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பெட்டிகள் தடம்புரண்டன. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் பார்சல் வேன் பெட்டி தீப்பிடித்தது.
இதையடுத்து பயணிகள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அங்கிருந்தவர்கள் ரயில் பயணிகளை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் வந்து ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடம் என்பது சென்னையில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதுபற்றி தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்என் சிங் கூறுகையில், ‛‛பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் குதூர் நோக்கி சரக்கு ரயிலும் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டது. அந்த ரயில் மெயின் லைனில் செல்வதற்கு பதில் லூப் லைனில் நுழைந்து நின்ற சரக்கு ரயிலின் பின்புறம் மோதியுள்ளது. இன்ஜின் மற்றும் பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. பலி எதுவும் இல்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பைலட்டுகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீண்டு வந்த பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது'' என்றார்.
இதுபற்றி தெற்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்குள் மைசூர் - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நுழைந்தது. அதன்பிறகு திடீரென்று ரயில் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு மாறி 75 கிலோமீட்டர் வேகத்தில் அங்கு நின்ற சரக்கு ரயிலின் பின்புறம் மோதியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பலி ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications