ஓட்டுக்கு 1000.. புது "டெக்னிக்கில்" நடக்கும் பண பட்டுவாடா.. அடுத்தகட்டத்திற்கு போன "தொழில்நுட்பம்"
சென்னை: மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் வன்முறை சம்பவங்கள் எப்படி தேர்தல் ஆணையத்துக்கு ஒரு தலைவலியாக மாறுகிறதோ, அது போல தமிழகத்தில் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு மிகப்பெரிய தலைவலியாகும்.
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எங்களால் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்கிறோம் என்பதை தேர்தல் ஆணையம் நாட்டு மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக ஒப்புக் கொள்வது போலிருந்தது அந்த நடவடிக்கை என்றால் எந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் மட்டும் இப்படி பணம் விளையாடுவதற்கு பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது.
'சாத்தான்'குளம் ஃபார்முலா
2003ம் ஆண்டு சாத்தான்குளம் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற்ற போது ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. அப்போதுதான் முதல் முறையாக தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் துவங்கியதாக தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன்பிறகு, திமுக ஆட்சி அமைந்தபோதும் இந்த கலாச்சாரம் தொடர்ந்தது. திருமங்கலம் பார்முலா என்று அப்போது பேசப்பட்டது. தமிழகத்தில் எந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, இடைத்தேர்தல்களில் அதுதான் வெற்றிபெறும் என்ற மோசமான சூழ்நிலை உருவானது.
தேர்தல் ஆணையம் பணி
ஐந்து வருடங்கள் கருப்பு பணத்தை சேர்த்து விட்டு அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் வாக்காளர்களுக்கு பணமாக அளிக்கின்றன சில கட்சிகள் மற்றும் சில வேட்பாளர்கள். எனவே 10 நாள் 20 நாட்களுக்குள் இத்தனை கருப்பு பணத்தையும் தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும் என்று நினைப்பது அதிகபட்ச எதிர்பார்ப்பு என்பதுதான் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக இதற்கு முன்பு பரிந்துரைத்த பல முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்தாக இருக்கிறது.
பறக்கும் படை தீவிரம்
முந்தைய தேர்தல்களில் எப்படி பணப்பட்டுவாடா பிரச்சினையாக இருந்ததோ, இந்தப் பொதுத் தேர்தலிலும் அப்படித்தான் இருக்கிறது என்கிறது தேர்தல் வட்டாரம். ஆவடி, போடிநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள பணம், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் வரும் அடுத்தடுத்த நாட்களில் இந்த தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்கிறார்கள்.
வேறு லெவல் தொழில்நுட்பம்
முன்பு வாக்காளர்கள் கையில் பணமாக கொடுத்தனர். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலகட்டம் இது. எனவே, பண பரிமாற்றமும் வேறு வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நகர்ப்பகுதிகளில், தள்ளுவண்டிகளில் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் கூட பேடிஎம், கூகுள் பே, போன் ஃபே உள்ளிட்டவற்றில் பணத்தை பெறுகின்றனர். எனவே நகர்ப்புற பகுதிகளில் இதுபோன்ற பணப்பரிமாற்ற செயலிகள் மூலமாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஒரு குடும்பம்
ஒரே நபர் பலருக்கும் 500 அல்லது 1000 என்ற வகையில் பணத்தைச் செலுத்தினால் வங்கிகள் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் பறந்து விடும் என்பதால் தங்களது கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னணி தொண்டர்களிடம் பணத்தை கொடுத்து அவர்கள் கூகுள் பே, பேடிஎம் போன்றவற்றின் மூலமாக வாக்காளர்களுக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு நபர் அதிகபட்சம் 10 வாக்காளர்களுக்கு அனுப்பி வைத்தால் போதுமானது. வாக்காளர்கள் என்று கூட கிடையாது குடும்ப தலைவருக்கு அனுப்பினால் போதும். அங்கு குறைந்த பட்சம் 4 அல்லது 5 வாக்குகள் உறுதி செய்யப்பட்டு விடும் என்று கண் சிமிட்டுகிறார்களஅ சில கட்சி நிர்வாகிகள்.
10 சதவீதம்
அதே நேரம் மொத்த பரிமாற்றத்தில் இது 10 சதவீதம் மட்டும்தான். நகர்புறங்களை தாண்டி பிற பகுதிகளில் இன்னும் வாக்காளர்களுக்கு கைகளில் நேரடியாக பணம் தரப்படுகிறது. அதில் பறக்கும் படையிடம் பிடிபடுவது மிக சொற்ப எண்ணிக்கையில்தான். ஒருவேளை மேலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டால், பேடிஎம், கூகுள் போன்றவற்றின் மூலமாக பண பரிமாற்றம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வங்கி பரிமாற்றங்களில் நிகழும் சிறு சிறு மாற்றங்களையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறது. இது யதார்த்தத்தில் மிகவும் கஷ்டமான விஷயம் ஆகும்.
எப்படியெல்லாம் சப்ளை
பெரும்பாலும் கருப்பு பணம்தான் வாக்காளர்களுக்கு சென்று சேருகிறது என்பதால், வங்கிகளில் டெபாசிட் செய்து நிதி பரிமாற்ற செயலிகள் வழியாக அனுப்புவது கம்மிதான். இப்போதைக்கு 10 சதவீதத்துக்கும் குறைவாகத்தான், இப்படி சப்ளை செய்யப்படுகிறது என்கிறார்கள் தேர்தல் சார்ந்த நிபுணர்கள். ஒரு ஓட்டுக்கு 500 முதல் 1000 வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதாம். நாளிதழ் சப்ளை செய்யும் நபர்கள், பால் பாக்கெட் போடும் நபர்கள், தெருமுனையில் உள்ள மளிகை கடைகள் இவற்றில் பணத்தை கொடுத்து, அவர்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்யப்படுகிறது.
பெரிய வேலை
ஒரு குற்றம் நடக்கிறது என்றால், ஒரு தரப்பு குற்றம் செய்யும், பாதிக்கப்படுவது மற்றொரு தரப்பாக இருக்கும். எனவே குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுப்பது எளிது. ஆனால், வாக்குக்கு பணம் கொடுப்பது என்ற குற்றச் செயலில், பணத்தை கொடுப்பவர் குற்றவாளி என்றால், அதை வெளியே தெரியாமல் வாங்கி வைத்துக் கொள்ளும் சில மக்களும் குற்றவாளிகள்தான். எனவேதான், ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதை தடுப்பது தேர்தல் ஆணையத்திற்கு இமாலய பணியாக மாறிவிட்டது.