பழைய வாகனங்களை எப்படி 'அழிப்பது?' புது கார், பைக் வாங்கும்போது செம டிஸ்கவுண்ட் வாங்க என்ன செய்யனும்?
சென்னை: பழைய வாகனங்களை தானாகவே அழித்துவிடுவது தொடர்பான ஒரு கொள்கை (Vehicle scrappage policy) மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே இது பற்றி அரசல் புரசலாக பேசிக்கொண்டு இருந்த போதிலும், தற்போது அதிகாரப்பூர்வமாக ஒரு வழிகாட்டுதலை வழங்கி உள்ளது இந்த பட்ஜெட்.
அதன்படி, சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய பைக், கார் உள்ளிட்ட எந்த வாகனமாக இருந்தாலும் அதிகபட்சம் 20 வருடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு அதை தானாக முன்வந்து அழித்துவிடவேண்டும்.

வணிக வாகனங்களுக்கு 20 வருடம்
வாடகை கார், சரக்கு வாகனம் உள்ளிட்ட வணிக தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் என்றால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை அழித்துவிட்டு, புதிய வாகனங்களை வாங்கிக்கொள்ளலாம் என்று நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார். காலத்தால் பழமையான வாகனங்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து அகற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

சுற்றுச்சூழல்
இதன் பின்னணியில் சில காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது காரணம், சுற்றுச்சூழல் மாசுபாடு. பழைய வாகனங்கள் அதிக அளவுக்கு புகையை கக்குவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை அகற்றிவிட்டு புது வாகனங்கள் வாங்குவதன் மூலம் இந்த சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்பது திட்டமாகும். மற்றொரு காரணம் என்னவென்றால் புதிய வாகனத்தையும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களாக வாங்கச் செய்ய, மக்களிடையே ஊக்கம் பிறக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

எலக்ட்ரிக் வாகன சந்தை
மத்திய அரசு சமீப காலமாகவே எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவுக்கு பழக்கத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. டாடா, ஹுண்டாய் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை ஓரளவுக்கு நியாயமான விலையில் விற்பனைக்கு கொண்டு வந்து விட்டன. டாடா நெக்சான் காருக்கு, ஒருமுறை சார்ஜ் போட்டால் 300 கி.மீக்கு மேல் ஓடும் என்கிறார்கள். நெடுஞ்சாலைகளிலும், சார்ஜிங் போடும் வசதி உள்ளிட்ட சில கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தினால், அடுத்து வரும் காலகட்டங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான், இந்திய சந்தையில் உச்சத்தில் இருக்கும். இதற்கு இடையூறாக இருப்பது, டீசல், பெட்ரோல் போன்ற எரி பொருளை பயன்படுத்தக்கூடிய பழைய வாகனங்கள்தான். எனவே இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு என்கிறார்கள். சுற்றுச்சூழல் மாசுபடுவது குறைவதுடன், எலக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக நாம் கச்சா எண்ணை வாங்கும் அளவு குறைந்து, அன்னிய செலவாணி மிச்சப்படும்.

பழைய வாகனங்களை அகற்றுவது எப்படி?
பழைய வாகனங்களை எப்படி ஸ்கிராப் செய்வது? அதற்கான நடைமுறை என்ன என்பது பற்றி இப்போது பார்க்கலாம்: அது காரோ அல்லது பைக்கோ, எதுவாக இருந்தாலும், சொந்த வாகனமாக இருந்தால் 20 வருடங்களுக்கு உள்ளேயும், வணிக தேவைகளுக்கான வாகனமாக இருந்தால் 15 ஆண்டுகளுக்கு உள்ளேயும் ஸ்கிராப் செய்யப்படவேண்டும். இரும்பு கடைகளில் சென்று பழைய இரும்பு பாத்திரங்களை போடுவது போன்ற நடைமுறை இது கிடையாது. ஸ்கிராப் செய்வதற்காக பிரத்யேக டீலர்கள் இருக்கிறார்கள். ஸ்கிராப் கொள்கை திட்டம் கொண்டு வரப்பட்டுவிட்டதால், இனி, இதுபோன்ற டீலர்கள் வேகமாக வருவார்கள். அரசிடம் அனுமதி பெற்றுக்கொண்டுதான் இவர்கள் இந்த தொழிலுக்கே வர முடியும்.

ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டும்
ஒரு வாகன உரிமையாளர் தனது வாகனத்தை ஸ்கிராப் செய்ய வேண்டும் என்றால், முதலில் ஆர்டிஓ அலுவலகம் செல்லவேண்டும். அங்கு தங்களது அடையாளச் சான்றிதழ், வாகனத்தின் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனத்தின் உரிமையாளர் இவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டு பிறகு வாகனத்தின் மீது ஏதாவது வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா, அபராதம் செலுத்த வேண்டியது பாக்கி இருக்கிறதா, குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமா, என்பது உள்ளிட்ட முழு விவரங்களும் சேகரிக்கப்படும். ஒருவேளை அப்படி ஏதாவது சிக்கல் இருப்பின் அந்த வாகனங்களை ஸ்கிராப் செய்ய முடியாது. எந்த ஒரு சிக்கலும் இல்லாவிட்டால் இதை செய்வதற்கான அனுமதி சான்றிதழை ஆர்டிஓ அலுவலகம் உங்களுக்கு வழங்கும்.

ஸ்கிராப் ஏஜென்ட்கள்
இந்த சான்றிதழை எடுத்துக் கொண்டு ஸ்கிராப் செய்யும் ஏஜென்சியை அணுகி அவர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும். அவர்களும் வாகனத்தின் உரிமையாளர் நீங்கள் தானா என்பது உட்பட பல்வேறு ஆவணங்களை பரிசோதித்து பார்ப்பார்கள். அங்கு பழைய வாகனத்திற்கான விலையை ஏஜென்சியிடம் நீங்கள் பேசி முடிவு செய்து கொண்டு வாகனத்தை வழங்கி விடலாம். அந்த வாகனத்தின் சேஸிஸ் பிளேட் என்பதை மட்டும் தனியே எடுத்து, உரிமையாளரிடம் ஸ்கிராப் ஏஜெண்டுகள் வழங்கி விடுவார்கள். இதன் பிறகு அந்த வாகனம் ஸ்கிராப் செய்யப்படும்.

புது வாகனம் வாங்கும்போது தள்ளுபடி கிடைக்கும்
இந்த சேஸிஸ் நம்பருடன் மறுபடி ஆர்டிஓ அலுவலகம் சென்று அவர்களிடம் அதை ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அதை பாதுகாப்பாக சேமித்து வைப்பார்கள். உங்களுக்கு வாகனத்தின் பதிவு எண் விடுவிக்கப்படும். புதிய வாகனங்களுக்கு அது கொடுக்கப்படும். உங்களது புதிய வாகனத்திற்கு அதே பதிவு நம்பர் வேண்டும் என்றால் கூட, நீங்கள் முறையாக விண்ணப்பித்து புதிய வாகனத்துக்கு அதே நம்பரை பெற்றுக் கொள்ளலாம். இதில் இன்னொரு நன்மை என்னவென்றால் நீங்கள் புதிய வாகனம் வாங்கச் செல்லும்போது ஸ்கிராப் செய்யப்பட்ட சான்றிதழை காட்டினால் சாலை வரி மற்றும் பதிவு வரி ஆகியவற்றில் இருந்து தள்ளுபடி வழங்கப்படும் என்கிறது மத்திய அரசு. இதில் பதிவு வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. எப்படியும் டிஸ்கவுண்ட் என்பது, லட்சத்தை தாண்டி விடும். அது பற்றிய தெளிவான அறிவிக்கை இன்னும் வெளியாக வேண்டியிருக்கிறது.

வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி
இருக்கும் வாகனத்தை ஸ்கிராப் செய்வதால் ஏற்படும் இழப்பை, புதிய வாகனம் வாங்கும் போது கொடுக்கப்படும் தள்ளுபடி மூலமாக ஓரளவு சரி செய்துகொள்ளலாம் என்பதால் மக்களும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என்று நினைக்கிறது மத்திய அரசு. பழைய வாகனங்களை பழுது பார்க்க செலவிடுவதை விட இது நல்ல ஆப்ஷன் என்ற மனநிலையில்தான் பெரும்பாலான மக்கள் இருப்பார்கள்.

காருக்கு கார், பைக்கிற்கு பைக்
ஸ்கிராப் செய்யும்போது நஷ்ட ஈடாக ஏஜென்டிடமிருந்து கிடைக்கும் பணம் மற்றும் புதிய வாகனத்தை வாங்கும்போது கிடைக்கும் டிஸ்கவுண்ட் ஆகிய இரட்டை நன்மைகளை வாகன உரிமையாளர்கள் பெறலாம். ஸ்கிராப் செய்யாமல் இது போன்ற நன்மைகளை புதிய வாகனம் வாங்கும் போது பெறமுடியாது.
கார் ஸ்கிராப் செய்யப்பட்டால் புதிதாக கார் வாங்கும்போது சலுகை தரப்படும், பைக் ஸ்கிராப் செய்யப்பட்டால் புதிதாக பைக் வாங்கும்போது சலுகை தரப்படும். நீங்கள் எந்த பிராண்ட் வாங்கினாலும் அது பிரச்சினையில்லை. டிஸ்கவுண்ட் உண்டு.

பழைய வாகனங்கள் விற்பனை தொழில்
அதேநேரம் இனிமேல் பழைய வாகனங்கள் வாங்கி விற்கும் தொழிலில் இருப்பவர்கள் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. பழைய வாகன விற்பனை சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என்று அந்தத் துறையில் இருப்பவர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்துக்குமே புதிய வாகனங்களை வாங்குவது தான் சிறப்பாக இருக்க முடியும். அதுவும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது சிறப்பாக இருக்க முடியும் என்பதால் இந்த திட்டம் பெரும்பாலானோரால் வரவேற்கப்படுகிறது. ஒரு சிலரால், விமர்சனமும் செய்யப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications