கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்.. காங். தலைவர் கே.எஸ் அழகிரி பலே பல்டி!
கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்.. காங். தலைவர் கே.எஸ் அழகிரி பலே பல்டி!
சென்னை: திமுகவை விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டியளித்துள்ளார். நேற்று அவர் கமலுக்கு அழைப்பு விடுத்து விட்டு இன்று பலே பல்டி அடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் லோக் சபா தேர்தலின் போது 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ், பாஜக ஆகியவற்றின் கூட்டணியில் சேர மாட்டேன் என்று கூறினார். இந்த பேட்டியில், கமல்ஹாசன் திமுக அதிமுக ஆகிய கட்சிகளையும் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று பேட்டியளித்த, புதிதாக தேர்வாகி இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் - திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் சேர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பேட்டி
இது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இது விமர்னத்துக்குள்ளானது. காங்கிரஸ் தலைமைக்கும் இதுகுறித்து தகவல் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சைகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விளக்கமளித்துள்ளார்.
என்ன கூறினார்
கே.எஸ் அழகிரி இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை.
திமுக
திமுகவை கமல்ஹாசன் விமர்சித்தது இப்போதுதான் கவனத்திற்கு வந்தது. திமுகவை கமல்ஹாசன் தேவையில்லாமல் விமர்சித்துள்ளார். திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்.
முடிவு
எங்கள் கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி. கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகளை திமுக - காங்கிரஸ் சேர்ந்து முடிவு செய்யும். திமுக பற்றி பேசியது தெரியாமல் கமலை கூட்டணிக்கு அழைத்துவிட்டேன்.
கண்டிப்பாக இல்லை
திமுக மீதான கமலின் விமர்சனம் பாஜகவிற்கு உதவும், ஆனால் அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்த கொள்கைகளுக்கும் உதவாது, என்று கூறியுள்ளார். இதன் மூலம் கமல்ஹாசன் கண்டிப்பாக காங்கிரஸ் கூட்டணியில் இணைய மாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது.