எவ்ளோ தட்டியும் கதவை திறக்கல.. பால்கனி வழியாக இறங்க முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
சென்னை : ஜாம் பஜார் பகுதியில் வசித்து வந்த ஆண் நண்பரை பார்ப்பதற்காக வந்த பெண் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை ஜாம் பஜாரில் தங்கி, சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் 25 வயதான அந்தப் பெண் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார்.
நண்பர் கதவைத் திறக்காததால் 3வது மாடியில் இருந்து புடவையை கட்டி பால்கனியில் இறங்க முயன்றபோது தவறி கீழே விழுந்து இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

கதவை திறக்கவில்லை
சென்னை திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியில் வசித்து வரும் ஐடி ஊழியரான தனது ஆண் நண்பர் ராஜ்குமாரை காண நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் நீண்ட நேரமாக வீட்டின் கதவைத் தட்டி உள்ளார். அவரது செல்போனுக்கும் பல முறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த நண்பர் இரவுப்பணி முடித்துவிட்டு அசந்து தூங்கியதால் கதவை நீண்ட நேரமாக திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.

புடவையை எடுத்து
நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் இளம்பெண் தான் வைத்திருந்த புடவையை எடுத்து மூன்றாவது மாடியில் கட்டி அங்கிருந்து பால்கனிக்கு இறங்கி வர முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக புடவை அறுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு
அந்தப் பெண் விழுந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனே ஜாம் பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த வீட்டுக்குள் இருந்த ஐ.டி.ஊழியரான ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

ஐஏஎஸ் பயிற்சி
ராஜ்குமார் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருவது தெரியவந்தது. உயிரிழந்த இளம்பெண் நாமக்கல்லைச் சேர்ந்த மகிழ்மதி என்றும், அவர் ஜாம் பஜாரில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொள்பவர் என்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஊருக்கு செல்வதற்காக
ராஜ்குமாரிடம் விசாரித்ததில், உயிரிழந்த மகிழ்மதி ஊருக்கு செல்வதால் தன்னை அழைத்துச்செல்ல வேண்டும் என கேட்டதாகவும், அதற்காக தன் வீட்டிற்கு வந்ததாகவும், தான் அசதியில் தூங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications