பீலா வீட்டிற்கு போன ராஜேஷ்.. திடீரென வந்த பிரச்சனை.. போலீசுக்கு போன கேஸ்.. விடாத சர்ச்சை!
சென்னை: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது மனைவியான பீலா தங்கி இருக்கக்கூடிய வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும்
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் உச்ச நீதிமன்றம் சென்று இடைக்கால தடை வாங்கினார்.
வழக்கு பின்னணி: கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ். பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி உறுதி செய்தது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சிபிசிஐடி சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைய விலக்களிக்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். காவல்துறையில் உயர் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென ராஜேஷ் தாஸ் கூறுகிறார் ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயர் அதிகாரி தான் எனவும் கூறினார்.
ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, தனக்கெதிராக சதி செய்யப்பட்டு பொய் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 17ம் தேதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி,மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றம்; இந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் உச்ச நீதிமன்றம் சென்று இடைக்கால தடை வாங்கினார். இந்நிலையில், ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தொடர்ந்து, ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
விவாகரத்து: இதற்கு இடையில் ராஜேஷ் தாஸிடம் இருந்து ஐஏஎஸ் அதிகாரி பீலா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அதோடு தாஸ் என்று தனது பெயரில் உள்ள இரண்டாம் பெயரை நீக்கியும் அவர் செய்திகளில் விளம்பரம் கொடுத்தார். இது தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது மனைவியான பீலா தங்கி இருக்கக்கூடிய வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக ராஜேஷ் தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தையூரில் உள்ள பங்களாவில் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து மிரட்டிச் சென்றதாக பீலா வெங்கடேசன் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. விவாகரத்து வழக்கு விசாரணைக்கு இடையே பீலா வீட்டிற்கு சென்று ராஜேஷ் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications