வைரஸ் தீவிரமாக பரவினால்.. கொரோனா கட்டுப்பாடுகள் நிச்சயம் உண்டு.. அமைச்சர் மா.சுப்பரமணியன்
சென்னை: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவினால் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் ஆன பிஎப் 7 வகை கொரோனா பரவியிருப்பதுதான் சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருப்பதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தற்போது சீனாவில் கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக இது தொடர்பாக உண்மையான எந்த தகவலையும் அளிக்கவில்லை.

நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
சீனாவில் பரவி வரும் கொரோனா பிற நாடுகளிலும் பரவத் தொடங்கியிருப்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சீனா, சிங்கப்பூர், ஹாங்ஹாங், கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மா சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் நிலையில், மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், "கொரோனா வீரியம் அதிகரித்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்றார். ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்
புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது சீனா மட்டும் இன்றி தைவான், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் பரவியிருக்கிறது. சீனாவில் மட்டுமே உயிரிழப்பு உள்ளது. பிற நாடுகளில் உயிரிழப்பு இல்லை என்று தெரிகிறது. இருந்தாலும் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவின் வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. கொரோனாவின் வீரியம் அதிகரிக்கும் பட்சத்தில் மத்திய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்றார்.

தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக கணிசமாக கட்டுக்குள் உள்ளது. அந்த வகையில் நேற்று நேற்று 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 6 ஆண்கள், 8 பெண்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications