மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை... அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறக்கூடிய வகையில் அவசர சட்டத்தை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை கூட துச்சமாக கருதி சேவையாற்றி வரும் நிலையில் ஒரு சிலர் அவர்கள் மீது வெறுப்பை உமிழும் நிகழ்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.
இந்த சூழலில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது மத்திய அரசு.
சூப்பர் தகவல்.. சென்னையில் இந்த ஒரு மண்டலத்தில் மட்டும் கொரோனா இல்லை
நடவடிக்கை பாயும்
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்பு அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் மீதான தாக்குதலும் வெறுப்பும் அதிகரித்து வரும் சூழலில் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவசரச் சட்டம் கொண்டு வரவுள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி ஒப்புதல்
மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதால், அது விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடன் நடைமுறைக்கு வரும் என பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் வெகுவாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தண்டனை மற்றும் அபராதம் கடுமையாக இருப்பதால் தாக்குதல்கள் குறையக்கூடும்.
வெறுப்பு உமிழ்வு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது வெறுப்பை உமிழும் நிகழ்வுகள் நாடு தழுவிய அளவில் நடைபெறுகின்றன. இது தொடர்பான புகார்களை கவனமாக குறித்துக்கொண்ட மத்திய அரசு அவசரச்சட்டத்தை கொண்டு வரும் அதிரடி முடிவை இன்று எடுத்துள்ளது. இதனிடையே மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்தில் விசாரணை
மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்படும் அவசரச்சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிவடையும். மேலும் ஜாமீனில் வெளிவரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மருத்துவர்கள் சேவையாற்றி வரும் நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது மத்திய அரசு.